
கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய அளவில் வைரலாக இந்திய அளவில் பேசப்பட்டு வரும் ஒரு விஷயம் தான், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்பட்ட லட்டுக்களில், நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பூம், மீன் எண்ணெயும் கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்ட விஷயம். அதாவது இதற்கு முன்னதாக ஆந்திராவில் ஆட்சி பொறுப்பில் இருந்து வந்த ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சி காலத்தில் இந்த தவறுகள் நடந்திருப்பதாக, தற்பொழுது ஆந்திராவில் முதலமைச்சராக இருக்கும் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்தார்.
அதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தலையிட்ட ஆந்திராவின் துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண், ஒட்டுமொத்த இந்து மக்களின் நம்பிக்கையும் குலைக்கும் வண்ணம் இந்த விஷயம் நடைபெற்றிருக்கிறது. இனி எந்த ஒரு கோவிலிலும் இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருக்க, தனி வாரியம் ஒன்று அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். தொடர்ச்சியாக இந்த விஷயத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட லட்டுகளில் தொடர்ச்சியாக சோதனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
"உங்க ஆட்சியில் தான் நடந்திருக்கு பவன்" திருப்பதி லட்டு விவகாரம் - பொங்கியெழும் பிரகாஷ் ராஜ்!
திருப்பதி கோவிலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த செயலை செய்தவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு இடையில் பிரபல கோவில் ஒன்றில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்திலும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
அந்த சூழலில் தான் பிரபல இயக்குனர் மோகன் ஜி, ஒரு தனியார் YouTube சேனலுக்கு அளித்த பேட்டியில், திருப்பதி லட்டு மற்றும் பிரபல கோவிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் குறித்தும் சில கருத்துக்களை பேசி இருந்தார். அந்த வீடியோ பெரிய அளவில் வைரலானவை தொடர்ந்து, இன்று சென்னையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் அவரை, தேவையின்றி அவதூறு பரப்பிய வழக்கில் கைது செய்து இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இயக்குனர் மோகனின் கைது, தமிழக திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக பாஜக சார்பில் இதற்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இயக்குனர் மோகன் ஜி கைதை தொடர்ந்து, பாமக தலைவர் ராமதாஸ் தனது கண்டனத்தை வெளிபடுத்தியுள்ளார். அதாவது இயக்குனர் மோகன் ஜி பொதுநலம் கருதி பேசிய ஒரு விஷயத்தை, எந்த ஒரு அடிப்படை புரிதலும் இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாய் விஷயங்களை கோர்த்து, அதை தவறாக புரிந்து கொண்டு, அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். இது அதிகாரத்தின் உச்சமாகத் தான் பார்க்கப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இயக்குனர் மோகன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறார் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் "ஒரு பேட்டியில் பேசும் பொழுது மிகவும் தெளிவாக திருப்பதி கோவில் போல பிரபல கோவில் ஒன்றில், வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்துகள் கலக்கப்படுவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி, பின் அந்த பஞ்சாமிர்தங்கள் அழிக்கப்பட்டதாக தனக்கு செவிவழிச் செய்தியாக கிடைத்தது. அது குறித்த ஆதாரங்கள் எதுவும் தன்னிடம் இல்லை, இதனால் தான் நான் இதை செய்தியாளர்களிடம் எந்த இடத்திலும் பேசவில்லை, என்று மிகவும் கவனத்துடன் பொதுமக்கள் மீது இருக்கும் அக்கறையில் அவர் பேசியிருக்கிறார்".
"ஆனால் இதை தவறாக புரிந்து கொண்டு அவர் கைது செய்யப்பட்டு இருப்பது மிகப்பெரிய கண்டனத்திற்கு உரியது. ஆகவே இயக்குனர் மோகன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு தமிழில் வெளியான "பழைய வண்ணாரப்பேட்டை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கியவர் தான் மோகன். தொடர்ச்சியாக "திரௌபதி", "ருத்ர தாண்டவம்" மற்றும் "பகாசுரன்" உள்ளிட்ட திரைப்படங்களை இவர் இயக்கியிருக்கிறார். தன்னுடைய திரைப்படங்கள் மூலமாக ஜாதியை கருத்துக்களை தான் அதிக அளவில் மோகன் பேசுகிறார் என்கின்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகின்றது. ஆனால் சமூகத்தில் நடக்கின்ற உண்மையைத் தான் நான் எடுத்துக் கூறுகிறேன். அதனால் எனக்கு எந்த விதமான அச்சுறுத்தல் வந்தாலும் அதை துணிந்து எதிர்கொள்வேன் என்று பல நேர்காணல்களில் மோகன் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.