Published : Sep 26, 2024, 09:16 AM ISTUpdated : Sep 26, 2024, 09:20 AM IST
Continues Government Holiday: தமிழகத்தில் பள்ளி காலாண்டு தேர்வுகள் முடிவடைந்து செப்டம்பர் 27ம் தேதி முதல் விடுமுறை நாட்கள் தொடங்குகிறது. இதனையொட்டி, சென்னையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முடிந்து சனிக்கிழமை முதல் காலாண்டு விடுமுறை தொடங்கிவிடும். முதலில் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 9 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் அக்டோபர் 7ம் தேதி திங்கட் கிழமை அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) 28ம் தேதி (சனிக்கிழமை) 29ம் தேதி (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் பள்ளிகள் காலாண்டு விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 395 பேருந்துகளும், 28ம் தேதி (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
45
SETC Operates Special Buses
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27ம் தேதி வெள்ளிக் கிழமை அன்று 70 பேருந்துகளும் 28ம் தேதி சனிக்கிழமை அன்று 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 27ம் தேதி அன்று 20 பேருந்துகளும் 28ம் தேதி அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 12,691 பயணிகளும் சனிக்கிழமை 5,186 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 7,790 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.