இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Published : Jan 21, 2026, 01:47 PM IST

தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்திடவும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவித்திடவும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

PREV
14
மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று (21.01.2026) சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

24
மீண்டும் மீண்டும் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும், தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

34
முதல்வர் கவலை

தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர மீனவ சமூகத்தினருக்குக் கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியினையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

44
அனைத்து மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்

எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories