தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவிக்கும் விதமாக எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று அனல் பறக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவை வீழ்த்தி அக்கட்சியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தொடங்கப்பட்ட அமமுக தற்போது அதிமுகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும்,
23
டிடிவி தினகரனை அன்போடு வரவேற்கிறேன்..
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய திரு. டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
33
தமிழகத்தை மீட்போம்..
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று குறிப்பிட்டு தமிழக அரசியலில் சூட்டைக் கிளப்பி உள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தின் எதிர்கால நலன் கருதியும், அமமுகவின் நலன் கருதியும் எங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை ஓரம் வைத்துவிட்டு தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட உள்ளோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.