சென்னை கண்ணகி நகரில் தூய்மை பணியாளர் வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டு, அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை கண்ணகி நகர் பகுதியை சார்ந்த தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த வரலட்சுமி(30). இன்று வழக்கம் போல வேலைக்கு சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த போது வரலட்சுமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24
வரலட்சுமி உயிரிழப்பு
உயிரிழந்த வரலட்சுமியின் கணவர் 4 ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும் , 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வரலட்சுமியின் சம்பளத்தை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வந்த நிலையில் அவரது இழப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயை இழந்த குழந்தைகள் நிர்கதியான நிலையில் அரசு தரப்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் வரலட்சுமி உயிரிழப்புக்கு மின்சார வாரியத்தின் அலட்சியமே காரணம் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
34
ரூ.20 லட்சம் நிதியுதவி
இந்நிலையில் மின்சாரம் பாய்ந்து பலியான பெண் தூய்மை பணியாளர் வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சம், தனியார் தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சம் என ரூ.20 லட்சம் நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மை பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்துக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் ஆறுதல் தெரிவித்த கையோடு அறிவித்தப்படி ரூ.20 லட்சம் நிவாரணத்தை வழங்கினார். மேலும் கணவருக்கு மாநகராட்சியின் பணி வழங்கப்படும் மற்றும் அவர்களின் இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.