
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்றது. அதில் அமைச்சர் வேலுமணி மற்றும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை: தூத்துக்குடி அடுத்த விளாத்திகுளத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்த சிறுமி கழிப்பறை இல்லாததால் வயல் காட்டிற்கு சென்ற நிலையில் மாலை 6.30 மணிக்கு சென்று இரவு 9 மணி வரை காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்லும் போது புகாரை எடுக்காமல் அலைக்கழித்த நிலையில் மறுநாள் பிற்பகலில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த ஒரு சம்பவமே திமுக ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும் என்பதற்கு ஒரு சான்று என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் யாருக்குமே எங்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அனைவருக்குமே உயிர் பயம் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை திமுக பிரமுகரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் மறைந்த முதலமைச்சர் அம்மா ஆட்சியில் இருக்கும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் யாராவது ஈடுபட்டால் அவர்கள் வெளியே இருக்க முடியுமா? ஆனால் இன்று திமுக ஆட்சியில் ஒரு பெண் குழந்தையாக இருந்தாலும் தாய்மார்களாக இருந்தாலும் 75 வயது மூதாட்டியாக இருந்தாலும் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் விமர்சித்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்த முறை வச்ச குறி தப்பாது என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டி இருப்பதாகவும் மூன்று முறை தோற்று விட்டு மீண்டும் அதே குறிய இந்த முறையும் வைத்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் திமுகவினர் தோற்கப்போகிறார்கள். திமுகவை பொருத்தவரை தாய்மார்கள் வங்கிக் கணக்கில் 5000 ரூபாய் போட்டு விட்டதால் தாய்மார்கள் சந்தோஷமாக இருப்பதைப் போல கூறுகிறார்கள். ஆனால் எந்த தாய்மார்களும் சந்தோஷமாக இல்லை அவர்களுக்கு வரவேண்டிய பணம் வங்கிக் கணக்கிற்கு வந்திருக்கிறது அவ்வளவுதான். ஆனால் இதில் சந்தோஷப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றார். வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு செலுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்து முதல் 28 மாதங்களுக்கு அதனை கொடுக்காமல் அடுத்த 32 மாதத்திற்கு 32 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
நாம் எல்லோரும் ஒரே குடும்பம். ஆனால் திமுகவிற்கு சபரீசன் குடும்பம் மற்றும் உதயநிதி குடும்பம் மட்டுமே தவிர வேறு யாரும் குடும்பம் கிடையாது. கோவை வடவள்ளி பகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்டப்பட்ட சுகாதார நிலைய கட்டிடத்தை திமுக நிர்வாகி தனது வீடாக உபயோகித்து வந்ததாகவும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த போது திமுகவினர் அடித்து பிடுங்கிய நிலங்களை மீண்டும் மீட்பதற்காக தனி இலாகாவை போட்டது போன்று மீண்டும் ஒரு நிலை வந்து விட்டதாகவும் சுட்டிக்காட்டினர்.
மத்திய அரசின் எல்லா திட்டங்களும் மாநில அரசு மூலம் தங்கு தடை இன்றி மக்களுக்கு செல்ல வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒரு நாளைக்கு ஒவ்வொருவர் மீதும் 150 ரூபாய் கடன் உயர்ந்து வருவது தான் திராவிட மாடல் அரசு. ஒரு நாளைக்கு 20 ரூபாயை கொடுத்துவிட்டு 130 ரூபாய் கடனை ஏற்றி விடுவதாகவும் நான் கூறிய கணக்கு தவறு என்றால் மேடை போட்டு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் சவால் விடுத்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் 88 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2080 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருக்கிறார்கள். குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட குற்றச்சம்பவங்கள் 39,900 எனவும் 18 வயதிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு எதிராக சராசரியாக ஒரு நாளைக்கு 22 பேர் என்ற அடிப்படையில் குற்றங்கள் நடந்திருக்கிறது என்றால் என்ன மண்ணாங்கட்டி ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும் இதை நான் சொல்லவில்லை உள்துறை செயலாளர் நடத்திய பத்திரிகை பெட்டியில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லை எங்கள் எல்லை குமரி எங்கள் தொல்லை என்று அன்று திமுக கூறியதால் இன்றுவரை குமரியில் திமுக இல்லை என்றும் அதேபோல் இன்று தயாநிதி மாறன் கோயம்புத்தூர் காரர்கள் குசும்புக்காரர்கள் அவர்கள் மற்றவர்களை வாழ வைக்க மாட்டார்கள் என்று கூறிய போது அதனை ரசித்து கைதட்டி சிரித்தவர் பத்து ரூபாய் பாலாஜி என்றார்.