இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா 5 சாதனைகளை படைத்தார். இந்த போட்டியில் அவர் 37 பந்துகளில் சதம் விளாசி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.
IND vs ENG 5th T20: 5வது டி20யில் ஒன்றா, இரண்டா 5 சாதனைகளை படைத்த அபிஷேக் சர்மா; செம மாஸ்!
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையே 5வது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடேவில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது.
சிக்சர் மழை பொழிந்த தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 54 பந்தில் 135 ரன்கள் அடித்து பிரமிக்க வைத்தார். 37 பந்தில் சதம் அடித்த அவர் மொத்தம் 13 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார். இது அபிஷேக் சர்மாவின் 2வது சதமாகும். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இமாலய இலக்கை நோக்கி துரத்திய இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் வெறும் 97 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 150 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
24
இந்தியா-இங்கிலாந்து டி20
அந்த அணியின் பில் சால்ட் (23 பந்தில் 55 ரன்), ஜேக்கப் பெத்தல் (10 ரன்) தவிர மற்ற யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் சர்மா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. பேட்டிங்கில் சதம், பவுலிங்கில் 2 விக்கெட் வீழ்த்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த தொடரில் மொத்தம் 14 விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார்.
இந்த 5வது டி20 போட்டியின்போது அபிஷேக் சர்மா பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இந்த போட்டியில் 37 பந்துகளில் சதம் விளாசிய அபிஷேக் சர்மா அதிவேகமாக சதம் விளாசிய 2வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்த நிலையில், அபிஷேக் சர்மா 2 பந்துகளில் இந்த சாதனையை தவற விட்டார்.
இதேபோல் இந்த போட்டியில் மொத்தம் 13 சிக்சர்களை பறக்க விட்ட அபிஷேக் சர்மா, ஒரே டி20 போட்டியில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒரே போட்டியில் 10 சிக்சர்கள் அடித்திருந்தனர். இது மட்டுமின்றி இந்த போட்டியில் 135 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா, டி20 போட்டியில் தனிநபர் அதிகப்பட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்தியர் என்ற சாதனையையும் தன்வசமாக்கினார். மேலும் அதிவேகமாக இரண்டு சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையும் அவர் பக்கம் சென்றது.
44
அபிஷேக் சர்மா சாதனை
மேலும் டாப் 10 பட்டியலில் இருக்கும் அணிகளில் 2வது அதிவேக டி20 சதத்தையும் அபிஷேக் சர்மா பதிவு செய்தார். இந்த போட்டியில் இந்திய அணி பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) 95 ரன்கள் எடுத்தது. இது பவர்பிளேயில் இந்திய அணி எடுத்த அதிகப்பட்ச ரன்களாகும். இதற்கு முன்பு 2021ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக இந்திய அணி பவர்பிளேயில் 82 ரன்கள் அடித்திருந்தது. மேலும் இந்த போட்டியில் 247 ரன்கள் குவித்த இந்திய அணி, வான்கடே மைதானத்தில் அதிகப்பட்ச ரன்களையும் பதிவு செய்தது.