
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்று சமன் செய்தது. இதைத் தொடர்ந்து நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. அதற்கு முன்னதாக இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா டெஸ்ட் போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டார். ரவீந்திர ஜடேஜாவிற்கு முதுகுப் பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பெற்றார். இல்லையென்றால் ரவீந்திர ஜடேஜாதான் அணியில் இடம் பெற்றிருப்பார்.
இதைத் தொடர்ந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில், அடுத்து வந்த சுப்மன் கில் ரொம்ப நேரம் தாக்குபிடிக்காமல் 12 பந்துகளில் 2 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினார். அதன் பிறகு விராட் கோலி களமிறங்க, யஷஸ்வி ஜெய்ஸ்வல் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்திய அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. பின்னர் விராட் கோலி உடன் ஷ்ரேயாஸ் ஐயர் இணைந்து இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்கு பிறகு வந்த ஷ்ரேயாஸ் ஐயர் ரன் ஏதும் எடுக்காமல் ரபாடா பந்தில் 31 ரன்களில் கிளீன் போல்டார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி கூடுதலாக 5 ரன்கள் சேர்த்த நிலையில் 38 ரன்களில் ரபாடா வேகத்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரி அடித்த கையோடு வெளியேறினார்.
இவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் உடன் இணைந்து ஷர்துல் தாக்கூர் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஜெரால்டு கோட்ஸீ வீசிய பந்து ஷர்துல் தாக்கூரின் ஹெல்மெட்டில் பட்டு அவரது நெற்றியை பதம் பார்த்தது. எனினும், அதன் பிறகு முதலுதவி எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடி ரன்கள் சேர்த்தார்.
கடைசியாக அவர் 33 பந்துகளில் 3 பவுண்டரி உள்பட 24 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷர்துலின் விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் ரபாடா இந்தியாவிற்கு எதிராக முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
அதோடு, 14ஆவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதுமட்டுமின்றி, சர்வதேச கிரிகெட் போட்டிகளில் மொத்தமாக 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய 7ஆவது தென் ஆப்பிரிக்கா வீரர் என்ற சாதனையை படைத்தார். பின்னர் வந்த பும்ரா சிறிது நின்று 1 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு முகமது சிராஜ் களமிறங்கி 10 பந்துகள் பிடித்துள்ளார்.
இதற்கிடையில் நிதானமாக விளையாடிய கேஎல் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 14ஆவது டெஸ்ட் போட்டி அரைசதத்தை பூர்த்தி செய்தார். அவர், 70 ரன்கள் எடுத்திருந்த போது லேசான மழை பெய்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாததால் போட்டி நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு கனமழை பெய்யவே போட்டியானது 59 ஓவர்களிலேயே நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலமாக முதல் நாளில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணியில் பவுலிங்கைப் பொறுத்த வரையில் ரபாடா 5 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சென் ஒரு விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.