11 வருஷத்துக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் போட்ட டுவீட்..! இப்ப செம வைரல்

First Published Jul 11, 2022, 5:45 PM IST

11 ஆண்டுகளுக்கு முன் சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட், இப்போது செம வைரலாகிவருகிறது.
 

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த மாபெரும் சக்தியாக வளர்ந்துவருகிறார் சூர்யகுமார் யாதவ். உள்நாட்டு போட்டிகள் மற்றும் ஐபிஎல்லில் தொடர்ச்சியாக அபாரமாக ஆடியதன் விளைவாக, தன்னை இந்திய அணியில் தவிர்க்கமுடியாதபடி செய்து,  இந்திய அணியில் இடம்பிடித்தார்.
 

இந்திய அணிக்காக ஆட கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் சிறப்பாக பயன்படுத்தி ஸ்கோர் செய்துவருகிறார். டி20 உலக கோப்பைக்காக இந்திய அணி தயாராகிவரும் நிலையில், அணியில் இடம்பிடிக்க சில வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

ஆனால் அந்த போட்டியில் நான் இல்லை; எனக்கென இந்திய அணியில் நிரந்தர இடம் இருக்கிறது என்பதை உரக்க சொல்லும்படியான ஒரு இன்னிங்ஸை இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆடினார் சூர்யகுமார் யாதவ். 
 

216 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி விரட்டியபோது ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்துவிட்ட போதிலும், தனி ஒருவனாக நிலைத்து நின்று இங்கிலாந்து பவுலிங்கை பொளந்துகட்டி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி 48 பந்தில் சதமடித்தார். 55 பந்தில் 117 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். ஆனால் 19வது ஓவரில் அவர் ஆட்டமிழந்ததால் 17 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

சூர்யகுமார் யாதவின் இந்த அபாரமான இன்னிங்ஸை தொடர்ந்து, 11 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யகுமார் யாதவ் எதிர்காலத்தில் மிகப்பெரிய வீரராக ஜொலிப்பார் என்பதை கணித்து ரோஹித் போட்ட டுவீட் இப்போது செம வைரலாகிவருகிறது. 
 

2011ம் ஆண்டு சூர்யகுமார் யாதவ் குறித்து ரோஹித் சர்மா பதிவிட்ட டுவீட்டில், சென்னையில் பிசிசிஐ விருது வழங்கும் விழா நடந்தது. சில அருமையான வீரர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். மும்பையிலிருந்து சூர்யகுமார் யாதவ் என்ற ஒரு வீரர் எதிர்காலத்தில் பெரிய வீரராக வருவார் என்று ரோஹித் சர்மா பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவு இப்போது வைரலாகிவருகிறது.
 

click me!