தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கொண்டாட்டம் மிக மோசமான அராஜகமாக மாறியது. நகரின் முக்கியப் பகுதிகளான செக்ரட்டேரியட் (தலைமைச் செயலகம்), எஸ்.ஆர் நகர் மற்றும் கூகட்பள்ளி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நள்ளிரவில் திரண்டனர். அவர்கள் சாலையின் நடுவே ஆபத்தான முறையில் பட்டாசுகளை வெடித்ததோடு, சாலையில் சென்ற வாகனங்களின் மீது ஏறி நின்று கூச்சலிட்டு, போக்குவரத்தை முற்றிலும் முடக்கினர். மேலும், அரசுப் பேருந்துகள் மற்றும் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த போலீஸ் தடுப்புகளை (Barricades) அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இதேபோல், கர்னூல் நகரிலும் அவர்களின் வெறிச்செயல் கட்டுக்கடங்காமல் போக, அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
நள்ளிரவில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் கடும் அச்சுறுத்தலாக மாறிய இந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஹைதராபாத் காவல்துறை தீவிர முயற்சி எடுத்தது. நிலைமை எல்லை மீறிச் சென்றதால், கூட்டத்தைக் கலைத்து போக்குவரத்தைச் சீரமைக்கப் போலீசார் லேசான தடியடி நடத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.