இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் தோனி. முன்னாள் கேப்டனான தோனி இந்திய கிரிக்கெட்டிற்கு மிகச்சிறந்த பங்களிப்பை ஆற்றியவர். டி20 உலக கோப்பை(2007), ஒருநாள் உலக கோப்பை(2011) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகிய 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்தவர்.
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக 4 முறை கோப்பையை வென்று கொடுத்து ஐபிஎல்லில் வெற்றிகரமான அணியாக சிஎஸ்கே அணி திகழ முக்கிய காரணமாக திகழும் தோனி, தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை மண்ணில் ரசிகர்கள் மத்தியில் ஆடிவிட்டுத்தான் ஓய்வுபெறுவேன் என ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்திய அணி தோனி தலைமையில் 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், தோனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், செப்டம்பர் 25(நாளை) மதியம் 2 மணிக்கு உங்களுக்கு பரபரப்பான செய்தியை சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதையடுத்து தோனி என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.