ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டி வெற்றிக்குப் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பஹல்காம் குறித்து பேசியதற்காக இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது ஐசிசி அவருக்கு 30% அபராதம் விதித்துள்ளது.
லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு, இந்த வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்ற வீரர்களுக்கும், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் சமர்ப்பிப்பதாக சூர்யகுமார் யாதவ் கூறியிருந்தார்.
24
சூர்யகுமார், ஹாரிஸ் ராஃப்புக்கு அபராதம்
இது குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்திருந்தது. அதன்பேரில் சூர்யகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆசிய கோப்பை சூப்பர் ஃபோர் சுற்றில், இந்தியாவிற்கு எதிரான போட்டியின் போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் 'தகாத வார்த்தைகளை' பயன்படுத்தியதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சாஹிப்சாதா ஃபர்ஹானுக்கு எச்சரிக்கை
அதே வேளையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, ஃபர்ஹான் மற்றும் ராஃப்பின் செயல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
34
வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்
முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த பிறகு ஃபர்ஹான் துப்பாக்கியால் சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இரண்டாவது இன்னிங்ஸின் ஐந்தாவது ஓவரில் ராஃப், அபிஷேக் சர்மா மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
'ஹாரிஸ் ராஃப் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அவரது செய்கைக்காக அல்ல. சாஹிப்சாதா ஐசிசியிடம் இருந்து எச்சரிக்கை பெற்றுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் ஹாரிஸ் ராஃப் தனது விரல்களை உயர்த்தி 0 6 என்று காட்டினார். இது, இந்த ஆண்டு மே மாதம் இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, எல்லையில் நடந்த நான்கு நாள் மோதலின் போது ஆறு இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறும் ஆதாரமற்ற கூற்றுகளைக் குறிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.