
14 ஆண்டுகளுக்கு பிறகு குவாலியரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி வெற்றியை பெற்று புதிய சரித்திரம் படைத்துள்ளது. இது சூர்யகுமார் யாதவ் அண்ட் கோவிற்கு கிடைத்த வெற்றி. இந்தியாவிற்கு வந்த வங்கதேசம் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்று இழந்தது.
இதைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரையில் இரு அணிகளும் 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 13 போட்டிகளில் இந்திய அணியும், ஒரு போட்டியில் வங்கதேச அணியும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான 15ஆவது டி20 போட்டி நேற்று குவாலியரில் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 100 ரன்களை எட்டுவதற்குள்ளாக 7 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக ஒரு சில பவுண்டரிகள் கிடைக்கவே 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அந்த அணியின் ஆல் ரவுண்டர் மெஹிடி ஹசன் மிராஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் 2 ஓவரிலேயே 2 விக்கெட் எடுத்தார். இறுதியாக அவர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பிய சுழல் சக்கரவர்த்தி வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.
தனது அறிமுக டி20 போட்டியில் முதல் ஓவரை மெய்டனாக வீசி சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற மாயங்க் யாதவ் இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 21 ரன்கள் கொடுத்தார். முதல் ஓவரில் ரன்களை வாரி வழங்கிய ஹர்திக் பாண்டியா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் சீரான தொடக்கம் கொடுத்தனர்.
அபிஷேக் சர்மா தேவையில்லாமல் 16 ரன்களில் ரன் அவுட்டானார். இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். அதன் பிறகு வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 3 சிக்ஸர், 2 பவுண்டரி உள்பட 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சனும் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் நிதிஷ் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து இந்திய அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.
பாண்டியா 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் குவித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் வெற்றிக்கு 2 ரன்கள் தேவையிருந்த நிலையில் பாண்டியா வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்தார்.
இது ஆச்சரியமில்லை என்றாலும் இந்திய அணிக்காக அதிகப்படியான டி20 கிரிக்கெட் போட்டிகளை பாண்டியா சிக்ஸருடனேயே முடித்து கொடுத்திருக்கிறார். இதனை சக வீரர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தப் போட்டிக்கு இந்திய அணிக்கு கிடைத்த எளிய வெற்றி என்றாலும் குவாலியரில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு புதிய ஒரு மைதானத்தில் நடைபெறும் முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி. இந்த போட்டியில் இந்திய அணி 2ஆவது பேட்டிங் செய்து வெற்றி பெற்று முத்திரை பதித்துள்ளது. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்று முன்னிலையில் உள்ளது.
இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 9 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கிறது. 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி 12 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.