
சென்னை, கண்ணகி நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினார் நடிகை அம்பிகா. அப்போது பேசிய அவர், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதாபிமான அடிப்படையில் நடந்து கொள்ளலாம். மக்கள் வெறும் டிக்கெட் கிடையாது. கவுண்டர்ல போய் எடுக்குற டிக்கெட்டும் காசும் கிடையாது. உங்களுக்கு அடிபட்டால் உங்களுக்கு எப்படி வலிக்குமோ அதேமாதிரிதான் அவங்களுக்கும் வலிக்கும். அவர்களும் மனிதர்கள்தான். வெறும் எண்களாக அவர்களை பார்க்காதீர்கள்.
எல்லோர் மேலயும் கொஞ்சம் வருத்தம் இருக்கு. நான் சொல்லத்தான் முடியும். நான் ஃபீல் பண்ணலாம். ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் மனதில் போய் ஏறிப்பண்ணுங்கனு சொல்ல முடியாதுல்ல. நான் அரசியலுக்கு வரவேண்டும் என இருந்தால் அது நடக்கட்டுமே. எனக்கு அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் கிடையாது. நான் அரசியலுக்கு வந்தால் என்ன? வந்தால் ஒன்னும் தப்பில்லையே?’’ எனக் கூறினார்.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை சந்தித்தும் ஆறுதல் கூறியிருந்தார் நடிகை அம்பிகா. நடிகை அம்பிகா அரசியலில் நேரடியாக களமிறங்கவில்லை என்றாலும், அரசியல் தொடர்பான கருத்துகளை பலகாலமாக பகிர்ந்து வருகிறார். அரசியலில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை அவ்வப்போது வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது தாயார் கல்லாரா சரசம்மா 2014-ல் கேரள மாநில மகளிர் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். அம்பிகாவும் அவரது சகோதரி ராதாவும், நடிகை ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் அவருக்காக ஆண்டிபட்டி தொகுதியில் பிரச்சாரம் செய்துள்ளனர்.
2019-ல் முதலே அம்பிகா "நிச்சயம் அரசியலுக்கு வருவேன்" என்று கூறி வருகிறார். அரசியல் நிகழ்ச்சிகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறும் அவர், 2024-ல், மகளிர் உரிமைத் திட்டம் குறித்து நடிகை குஷ்புவின் ‘பிச்சை’ என்ற பேச்சுக்கு எதிராக அம்பிகா கடுமையாக விமர்சித்தார். அவர், "மக்களுக்கு ஆதரவாக இருந்து அரசின் திட்டங்களைப் பாராட்ட முடியாவிட்டால் அமைதியாக இருங்கள். அவமானப்படுத்தும் சொற்களைப் பயன்படுத்த வேண்டாம்" என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
2022-ல், பாலியல் குற்றங்கள் குறித்து சென்னை காவல்துறையின் பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து, குற்றவாளிகள் மீது வயது வரம்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 2024-ல் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அரசியலில் பங்கேற்கும் விருப்பம் இருப்பதாகவும், சரியான நேரத்தில் எந்தக் கட்சியில் சேருவது என்பதை முடிவு செய்வேன் என்றும் தெரிவித்தார். ஆனாலும், தற்போது வரை அவர் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராகவோ, பதவி வகிக்கவோ இல்லை.
அம்பிகா அரசியல் கருத்துகளைப் பகிர்ந்து, சமூகப் பிரச்சினைகளில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார், ஆனால் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கல்லாராவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை அம்பிகா. அம்பிகாவின் சகோதரி பிரபல நடிகை ராதா. 1976-ல் மலையாளத் திரைப்படமான சோட்டனிக்கரை அம்மன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழ் சினிமாவில் 1979-ல் சக்களத்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1981-ல் அந்த 7 நாட்கள் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் அவர், 1988-ல் என்.ஆர்.ஐ.பிரேம்குமார் மேனனை மணந்து, அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 1996-ல் விவாகரத்து பெற்றார். 2000-ல் நடிகர் ரவிகாந்தை மணந்ததாக தகவல்கள். ஆனால் 2002-ல் இந்த உறவும் விவாகரத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், ரவிகாந்த் இந்த திருமண வதந்தியை மறுத்து இருந்தார். தற்போது சென்னையில் தனது மகன்களுடன் வசிக்கிறார்.
சென்னை போரூர் பகுதியில் பல ஏக்கரில் அமைந்துள்ள ஏ.ஆர்.எஸ் கார்டன் திரைப்பட ஸ்டுடியோ அம்பிகாவுக்கும் ராதாவுக்கும் சொந்தமானது. 1983 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் திறந்த் வைக்கப்பட்டது. பல நூறுகோடி மதிப்புள்ள இந்த இடத்தை அம்பிகா, ராதா செய்த கைமாறுகளுக்காக எம்.ஜி.ஆர் கொடுத்த இடம் என்று கூறப்படுகிறது.