Published : May 21, 2025, 04:21 PM ISTUpdated : May 21, 2025, 04:23 PM IST
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று ஆஜராகவில்லை.
Tasmac Corruption - ED Case (டாஸ்மாக் முறைகேடு வழக்கு)
டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபான கடைகளுக்கு மதுபானங்களை கொண்டு செல்வதற்காக போக்குவரத்திற்கு டெண்டர் வழங்கியது போன்றவற்றில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த சோதனையை சட்ட விரோதமானது என்று அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
24
10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டில் மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது. சென்னை சூளைமேட்டில் உள்ள எஸ்.என்.ஜே மதுபான நிறுவன அலுவலகத்திலும், தேனாம்பேட்டையில் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, திருவல்லிக்கேணியில் தொழிலதிபர் தேவகுமார் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
34
சட்ட விரோத பணப்பரிமாற்றம்
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கும் நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு விசாரணை வளையத்தில் இருக்கும் பலருக்கும் உத்தரவிடப்பட்டிருந்தது. மற்ற உயர் அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜரான நிலையில், முக்கிய நபராக கருதப்படும் ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகவில்லை. டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான ஆகாஷ் பாஸ்கரன், சட்டவிரோத பண பரிமாற்றம் மூலம் வெளிநாடுகளில் முதலீடு செய்திருக்கலாம் என அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரன் ஆஜராகாமல் போக்கு காட்டியுள்ளார். அதேபோல் துரை செல்வராஜ் என்ற தொழிலதிபருக்கும் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவரும் ஆஜராகவில்லை எனத் தெரிகிறது. எனவே இவர்கள் எங்கு உள்ளார்கள்? இவர்களை எப்படி மீட்டு வருவது போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.