1863இல் விஸ்வநாத தத்தர், புவனேஸ்வரி தேவி என்போருக்கு ஜனவரி 12ஆம் தேதி மகனாக பிறந்தவர், நரேந்திரநாத் தத்தா. கொல்கத்தாவில் பிறந்த இவர் உலகமெங்கும் உள்ள இளைஞர்களுக்கு ஆதர்சன நாயகனாக 'சுவாமி விவேகானந்தராக' மாறுவார் என அப்போது யாருக்கும் தெரியாது.
நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்தாலும், நேரடியாக அரசியல் பணியில் தன்னை ஈடுபடுத்தவில்லை. ஆனால் அதில் ஈடுபட்டவர்களிடையே விவேகானந்தர் தாக்கம் இருந்தது. அகிம்சை வழியில் சுதந்திரம் வேண்டுமென போராடிய மகாத்மா காந்திக்கு, விவேகானந்தர் புத்தகங்கள் தேசபக்தியை அதிகமாக்கியது. தனிப்பட்ட மனிதனுடைய ஆளுமையை வளர்தெடுப்பதில் விவேகானந்தர் அருளிய இலக்கியத்தை விட வேறெதுவும் சிறந்ததில்லை என்கிறார் நேதாஜி.
நமக்கு வரும் துன்பங்கள் எல்லாமே நாம் அதற்காக நம்மை தயார்ப்படுத்திக் கொண்டதால்தான் வந்தவை என அறிய வேண்டும். அதில் ஒரு பாதியை நாம் செய்திருப்போம். புற உலகம் மறுபாதியை செய்திருக்கும். அதுவே துயரத்திற்கு காரணம். நம்மை நாமே அடக்கினால் துயரம் ஒருபோதும் வராது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.