
நடைபயிற்சி செல்வது உங்களுடைய மனநலனை மேம்படுத்தும். மனதில் எவ்வளவு குழப்பங்கள் இருந்தாலும் சிறிது தூரம் நடந்து செல்வது மனநிலையை சீராக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலை அல்லது மாலை ஏதேனும் ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது நடப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். ஆனால் முழு பலன்களை பெற எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்பது குறித்து பலருக்கு தெரிவதில்லை. இந்த பதிவில் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடப்பது உடலில் என்னென்ன நன்மைகளை செய்யும் என்பதை காணலாம்.
எடை கட்டுப்பாடு:
இந்த நவீன யுகத்தில் துரித உணவுகள் மக்களிடையே அதிகம் புழக்கத்தில் உள்ளது. உடற்செயல்பாடும் குறைந்துவிட்டது. பலர் அமர்ந்த நிலையில் வேலை செய்வதால் எடையும் அதிகரிக்கிறது. தினமும் 30 நிமிடங்கள் நடந்தால் உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும். நீங்கள் சுறுசுறுப்பாக நடைபயிற்சி மேற்கொண்டால் அதிக ஆற்றல் தேவைப்படும். இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். தினமும் 30 நிமிடங்கள் நடப்பது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் கெட்ட கொழுப்புகள் குறைந்து எடை குறைகிறது.
இதய ஆரோக்கியம்:
நடைபயிற்சி கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இது உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை குறைத்து இதய நோய்களுக்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
தசைகள், எலும்புகள் வலுவாகும்!
நீங்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும்போது கைகள், கால்களின் தசைகள் நன்கு இயங்கும். இதனால் தசைகள் வலுவாகின்றன. எலும்புகள் உறுதியாக மாற நடைபயிற்சி உதவுகிறது. தசையின் ஒருங்கிணைப்பு, உடலின் சமநிலை ஆகியவற்றை மேம்படுத்த நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். எலும்பு முறிவைத் தடுக்கவும் ,உடலில் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும், இயக்கத்திற்கும் நடைபயிற்சி உதவியாக உள்ளது.
மனநிலை சீராகும்!
நீங்கள் மனச்சோர்வு, பதற்றம் போன்ற மனநிலைகளில் இருக்கும் போது நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது. இது உங்களுடைய மனநிலையை மேம்படுத்தி மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் சுரப்பை குறைக்கிறது. சுறுசுறுப்பான புத்துணர்ச்சியான ஒரு நடைபயணம் உங்களுடைய மனநிலையை மகிழ்ச்சியாக மாற்றும். வீட்டின் பால்கனி அல்லது பார்க், சாலைகளில் நடக்கலாம். உங்களை புத்துணர்வாக உணரச் செய்து மனதை இலகுவாக மாற்ற நடைபயிற்சி நல்ல தேர்வாக இருக்கும்.
நீரிழிவு நோயை தடுக்கும்!
நடைபயிற்சி செய்வதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வரும். நீரிழிவு நோயை முன்கூட்டியே தடுக்கவும் நடைபயிற்சி உதவும். நடக்கும்போது தசைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி அதனை இரத்த ஓட்டத்தில் கலக்க விடாமல் தடுக்கிறது.
இதையும் படிங்க: வயசுக்கு ஏத்த வாக்கிங் முக்கியம்!! எந்த வயசுக்கு எவ்வளவு தூரம் நடக்கனும்?
எப்படி நடக்க வேண்டும்?
சர்க்கரை நோயாளிகள் மட்டுமின்றி மற்றவர்களும் கூட ஒரே முறையாக 30 நிமிடங்கள் நடப்பதை விட காலை உணவுக்கு பின் 10 நிமிடங்கள், மதிய உணவுக்கு பின் 10 நிமிடங்கள், இரவு உணவுக்கு பின் 10 நிமிடங்கள் என தனித்தனியாக30 நிமிடங்களில் நடந்து நிறைவு செய்யலாம். இது அவர்களின் செரிமானத்தை மேம்படுத்தும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் வைக்கும்.
இதையும் படிங்க: பவர் வாக்கிங் என்றால் என்ன? அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா!