எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மாரிமுத்து. அவர் அதற்கு முன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து படங்களை இயக்கினாலும், அதில் கிடைக்காத வெற்றியை இந்த ஒரே ஒரு சீரியல் அவருக்கு பெற்று தந்தது. "எம்மா.. ஏய்.." என்ற வசனம் தான் மிகவும் பிரபலமானது.
இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் வெளியிட்ட முகநூல் பதிவில்;- கண் திருஷ்டி உன்னை கவர்ந்து சென்று விட்டதா? பெண்களின் பொய் சாபம் உன்னை கொண்டு சென்று விட்டதா? தீடிர் புகழ் உன்னை எடுத்துச் சென்று விட்டதா? ஐயையோ உன்னுடைய "எம்மா.. ஏய்.." என்ற உன் வசனத்தில் சிறைபட்டவன் நான். பழக்கம் இல்லை என்றாலும் கண்கலங்கி நிற்கின்றேன். அழுது மாய்கிறேன். பலர் வீட்டில் இன்று உங்களுக்காக துக்கம் கடைபிடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. நினைத்ததை நீ சாதித்தாலும் இன்று இல்லாமல் போனது வருத்தமே..!
மக்கள் மனதில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிற நேரத்தில் எமன் இதயத்தில் இடம் பிடித்து விட்டாயோ? ஆதி குணசேகரன் வசனங்களால் காயப்பட்ட பெண்களும் இனி அழுது துடிக்கப் போகிறார்கள். இறைவா! இயக்குநர் மாரிமுத்து குடும்பத்தினருக்கு இதனை தாங்கிக் கொள்ளும் சக்தியை தர வேண்டும் என்று வேண்டுகிறேன் பூங்குன்றன் உருக்கமாக கூறியுள்ளார்.