
இந்த நடிகை தென்னிந்திய சினிமாவில் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அசத்தலான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கிய அவர் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரங்களில் ஒருவராக ஆனார். தனது பல மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றவர். அவர் வேறு யாருமில்லை கீர்த்தி சுரேஷ் தான்.
1992 ஆம் ஆண்டு மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜி சுரேஷ் குமார் - தமிழ் நடிகை மேனகாவின் மகள் தான் கீர்த்தி சுரேஷ். அவருக்கு ரேவதி சுரேஷ் என்ற மூத்த சகோதரியும் உள்ளார். கீர்த்தி சுரேஷ் 4-ம் வகுப்பு சென்னையில் தான் படித்தார். பின்னர் கேரளாவில் உள்ள பட்டம் கேந்திரிய வித்யாலயாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். சிறுவயதில், கீர்த்தி நீச்சல் கற்றுக்கொண்டார், அதற்காக பல விருதுகளையும் பெற்றார்.
கீர்த்திக்கு முதலில் திரைப்படத்துறையில் ஆர்வம் இல்லை. அவர் பேஷன் டிசைனிங் உலகில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் பேஷன் டிசைனிங்கில் தனது பட்டப்படிப்பைப் பெற்றார். லண்டனில் 2 மாத பயிற்சி பெற்றார்.
கீர்த்தி சுரேஷைப் பற்றி அதிகம் அறியப்படாத மற்றொரு தகவல் உள்ளது. அவர் ஒரு திறமையான வயலின் வாசிப்பாளராக இருந்தார். சிறுவயதிலிருந்தே இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆனால் பரபரப்பான வேலை அட்டவணை அவருக்கு இசைக்கருவியைப் பயிற்சி செய்ய அதிக நேரம் கிடைக்கவில்லை.
தனது தந்தையின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதுதான் கேமரா முன் கீர்த்தியின் திரைப்பயணம் தொடங்கியது. பைலட்ஸ், அச்சநேயனேநிக்கிஷ்டம் மற்றும் குபேரன் போன்ற திரைப்படங்ள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் அவர் குழந்தை நட்சட்த்திரமாக நடித்திருந்தார்.
11 வருடங்கள் கழித்து பிரியதர்ஷனின் கீதாஞ்சலி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். அந்த நேரத்தில் அவர் தனது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால், செமஸ்டர் இடைவேளையின் போது அவர் படத்தில் நடித்தார். அவரின் 2-வது படமான ரிங் மாஸ்டர் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷின் நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், ரெமோ, பைரவா, என பலப் படங்களில் நடித்தார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்தார். நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் படம் தான் கீர்த்தி சுரேஷின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. சாவித்ரியின் பயோபிக் படமாக உருவான இந்த படத்தில் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் பாத்திரத்தில் தனது சிற்பபான நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றுத்தந்தது.
பின்னர் தனது திரைவாழ்க்கையில் வெற்றி தோல்களை மாறி மாறி சந்தித்து வந்த அவர், பாக்ஸ் ஆபிஸில் சில மிகப்பெரிய வெற்றிகளை வழங்கினார். இதில் நானி நடித்த தசரா படமும் அடங்கும். இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினின் கடைசிப் படமான மாமன்னன் படத்தின் கீர்த்தியின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரகு தாத்தா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து, வருண் தவானுக்கு ஜோடியாக பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். மேலும் ரிவால்வர் ரீட்டா மற்றும் கன்னி வெடி ஆகிய படங்களையும் அவர் கைவசம் வைத்திருக்கிறார்..
கீர்த்தி சுரேஷ் தனது பணிக் கொள்கைகள் காரணமாக பட நிராகரித்தார். உதாரணமாக, 2021 ஆம் ஆண்டில், நித்தின் நடித்த தெலுங்கு திரைப்படமான மேஸ்ட்ரோ படத்தில் லிப்-லாக் காட்சி இருந்ததால் அந்த படத்தை அவர் நிராகரித்தார். நெருக்கமான காட்சிகளை தவிர்க்கும் கொள்கையை அவர் வைத்திருக்கிறார்.
இதனிடையே கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல வதிந்திகள் பரவியது. தன்னை விட 20 வயது அதிகமான நபரை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. எனினும் இந்த வதந்திகளை அவர் மறுத்தார். மேலும் இசையமைப்பாளர் அனிருத் உடன் அவர் டேட்டிங் செய்வதாகவும் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. ஆனால் அந்த தகவலை அவரின் தந்தை மறுத்திருந்தார்.
சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வதந்திகள் மீண்டும் பரவி வருகின்றன. தனது பள்ளி தோழரும், 15 ஆண்டுகளாக காதலித்த ஆண்டனி தட்டில் என்பவரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீர்த்தியும் ஆண்டனியும் தங்கள் பள்ளிப் பருவத்தில் காதலித்ததாகவும், அவர்களது திருமணம் டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் கோவாவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.