
பிரபல இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள "வேட்டையன்" என்கின்ற திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து முடித்திருக்கின்றார். வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் நேற்று செப்டம்பர் 20ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
ஏற்கனவே "ஜெயிலர்" திரைப்படத்தில் மிரட்டலான இசையை கொடுத்த ராக் ஸ்டார் அனிரூத் தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந்த திரைப்படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. குறிப்பாக "மனசிலாயோ" என்கின்ற பாடல் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் அவர்களுடைய குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் இந்த பாடலில் இணைத்து அசத்தியிருக்கிறார் அனிரூத்.
சல்மானுடன் இணையும் அட்லீ.. மெகா ஹிட் தமிழ் நடிகரிடம் நடந்த பேச்சு வார்த்தை - ஓகே சொல்லிட்டாரா?
ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவின் "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி மெகா ஹிட் இயக்குனராக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் புகழோடு வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் ஞானவேல். இப்போது தனது மூன்றாவது திரைப்படமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "வேட்டையன்" என்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார். "என்கவுண்டர் என்பது தண்டனை அல்ல.. ஒரு முன்னெச்சரிக்கை" என்கின்ற கருத்தை முன்வைத்து இந்த திரைப்படத்தை ஞானவேல் இயக்கியிருக்கிறார்.
முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை தமிழ் திரையுலகில் நடிக்க வைத்த பெருமையும் இந்த திரைப்படத்தின் மூலம் ஞானவேலை சேர்ந்திருக்கிறது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல மலையாள நடிகர் பாஹத் பாசில், தெலுங்கு திரை உலக நடிகர் ராணா டகுபதி, மலையாள திரை உலக நடிகை மஞ்சு வாரியர், நடிகை துஷாரா விஜயன் மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
ஞானவேலின் "வேட்டையன்" திரைப்படப் பணிகளை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 171வது திரைப்படமாக பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" என்கின்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேற்று அந்த திரைப்படத்தின் ஷூட்டிங்ளிருந்த அவர், விமான மூலம் சென்னை வந்த இறங்கினார். நேற்று மாலை சென்னையில் நடைபெற்ற "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்று பல விஷயங்கள் குறித்து பேசினார்.
ஞானவேலின் "ஜெய் பீம்" திரைப்படத்தை குறித்து வெகுவாக பாராட்டி பேசிய ரஜினிகாந்த், பொதுவாக கருத்து சொல்லும் திரைப்படங்கள் தனக்கு பெரிய அளவில் செட்டாகாது என்றும், இருப்பினும் இந்த "வேட்டையன்" திரைப்படம் ஒரு ஸ்பெஷலான திரைப்படமாக தனக்கு இருக்கும் என்றும் பேசி இருந்தார். மேலும் இளம் வயதில் குழந்தையாக இருந்த அனிருத் பற்றி பல விஷயங்களை நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் பகிர்ந்து கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது குருவாக, பாலிவுட் உலகின் மிகப்பெரிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிதாபச்சனின் திரை வாழ்க்கை குறித்தும் பல விஷயங்களை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சுமார் 33 ஆண்டுகள் கழித்து அமிதாப்பச்சனுடன் இந்த "வேட்டையன்" திரைப்படத்தில் இணைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நேற்று நடந்த நிகழ்வில் அமிதாப்பச்சன் குறித்து பல விஷயங்களை பேசினார் அவர்.. அவர் பேசுகையில்.. "ஒரு காலகட்டத்தில் அமிதாபச்சன் திரைத்துறையில் பல இன்னல்களை சந்தித்தார். குறிப்பாக அவர் தயாரித்த சில திரைப்படங்களை சரியாக செல்லாத நிலையில், மிகப்பெரிய பொருள் நெருக்கடியை சந்தித்தார். அவருக்கும் காந்தி குடும்பத்திற்கும் மிக நெருங்கிய நட்பு உண்டு, இருப்பினும் ஒருபோதும் யாரிடமும் அவர் உதவி என்று சென்று நின்றதில்லை".
"அவர்கள் வீட்டு வாட்ச்மேனுக்கு சம்பளம் கொடுக்க கூட அப்போது அவரிடம் பணம் இல்லாமல் இருந்தது, அவருடைய ஜூகு வீடும் ஏலத்திற்கு வந்தது. அந்த ஒரு நொடியில் ஒட்டுமொத்த பாலிவுட் உலகமே அவரைப் பற்றி ஏளனமாக பல விஷயங்கள் பேசியது. ஆனால் அவர் ஒருபோதும் எதையுமே விட்டுக் கொடுத்ததில்லை. மீண்டும் கடினமாக உழைக்க தொடங்கினார், மூன்றே ஆண்டுகளில் அவர் மீண்டும் பெரும் பணக்காரர் ஆனார். அவரை நோக்கி வந்த அனைத்து வாய்ப்புகளையும் ஏற்றுக் கொண்டு இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டார். இந்த 82 வயதிலும் கூட ஒரு நாளைக்கு பத்து மணி நேரத்திற்கு மேல் அவர் பணி செய்கிறார். உண்மையில் எனக்கு அவர் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்" என்று கூறி மிகவும் எமோஷனலாக பேசியிருக்கிறார் ரஜினிகாந்த்.