
டிடிஎப் வாசன் நடிப்பில் உருவாகியுள்ள மஞ்சள் வீரன் படம் வரும் பொங்கல் தினத்தன்று அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கு போட்டியாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. என்றாலும் அஜித் உடன் மோதும் அளவிற்கு டிடிஎப் வாசன் வளர்ந்துவிட்டாரா என்பது தான் தற்போது ரசிகர்களின் கேள்வி. யூடியூப் மூலமாக பிரபலமானவர் சர்ச்சைக்குரிய டிடிஎப் வாசன்.
இவர் பைக் சாகசம் செய்து வீடியோக்களை பதிவிட்டு யூடியூப்பில் பிரபலமானார். அதிலும் குறிப்பாக அவருக்கு 2கே கிட்ஸ் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை கவரும் வகையில் தொடர்ந்து அதிவேகமாக பைக் ஓட்டுவதும், பைக்கில் வீலிங் செய்வதும் என வீடியோக்கள் பதிவிட்டு வந்தார்.
ஒருகட்டத்தில் சாலை விதிகளை மீறி அதிவேகமாக பைக் ஓட்டியதற்காக டிடிஎப் வாசன் மீது கோவை சூலூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அதன்பின்னர் ஆபீஸ் திறப்பு விழாவிற்கு வந்த டிடிஎப் வாசனை காண குவிந்த ரசிகர்களால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதை கண்டித்து வீடியோ வெளியிட்ட வாசன், போலீசுக்கே சவால் விட்டு பேசினார். இப்படி செல்லும் இடமெல்லாம் சர்ச்சையில் சிக்கி வந்தார் வாசன்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்ட்ராவுக்கு பைக் ரைடு செல்ல கிளம்பியபோது காஞ்சிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முயன்ற வாசன் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தடுப்பின் மீது மோதி அவர் ஒருபுறம், அவரது பைக் ஒருபுறம் தூக்கிவீசப்பட்டது. இதுகுறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் டிடிஎப் வாசனின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வாசனுக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் அவரின் பைக்கை ஏன் எரிக்கக்கூடாது என காட்டமாக விமர்சனமும் செய்திருந்தார். பின்னர் டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சில மாதங்கள் சிறைவாசத்துக்கு பின் ஜெயிலில் இருந்து ஜாமினில் வெளிவந்த வாசன், தற்போது பைக் ஓட்ட முடியாததால், சொந்தமாக கடை ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இப்படியெல்லாம் சர்ச்சைக்கு பெயர் போனவர் தான் டிடிஎப் வாசன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் மஞ்சள் வீரன்.
இயக்குநர் செல்லம் (செந்தில் செல் அம்) இயக்கத்தில் டிடிஎப் வாசன் ஹீரோவாக நடித்துள்ள முதல் படம் மஞ்சள் வீரன். இந்தப் படத்தில் கூல் சுரேஷூம் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, அன்றைய தினத்தில் தான் அஜித் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லீ படமும் திரைக்கு வர இருக்கிறது.
எனினும், அஜித் படம் பொங்கல் பண்டிகைக்கு வருவதாக இருந்தால் டிடிஎப் வாசனின் மஞ்சள் வீரன் படம் குட் பேட் அக்லி படத்துடன் மோதும். ஆதலால் முதல் படத்திலேயே அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் டிடிஎப் வாசனுக்கு மஞ்சள் வீரன் வரவேற்பு கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், அதற்குள் மஞ்சள் வீரன் பொங்கல் ரேஸிலிருந்து பின்வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்திற்கு உலகம் முழுவதும் மாஸ் இருக்கும் நிலையில், குட் பேட் அக்லீ படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், மஞ்சள் வீரனுக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆதலால் இந்தப் படம் தள்ளி வைக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனினும், மஞ்சள் வீரன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் இது வெறும் தகவல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித்திற்கு போட்டியாக வந்து டிடிஎப் வாசனால் ஜெயிக்க முடியாது. அதுவும் டிடிஎப் வாசனுக்கு முதல் படம். ஆதலால், டிடிஎப் வாசன் படத்தை தனியாகவே வெளியிட படக்குழு திட்டமிடும் என்பது குறிப்பிடத்தக்கது.