காதல் படம் சொதப்பியதால் மீண்டும் பேய்க்கதை பக்கம் சென்ற சுந்தர் சி - உருவாகிறது ‘அரண்மனை 4’... ஹீரோ இவரா?

First Published Jan 22, 2023, 8:32 AM IST

சுந்தர் சி இயக்கத்தில் கடந்தாண்டு ரிலீஸ் ஆன காஃபி வித் காதல் திரைப்படம் தோல்வியை தழுவியதால், அடுத்ததாக அரண்மனை 4-ம் பாகத்தை அவர் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், பேய் படங்களுக்கு அதிக மவுசு இருந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து பேய் படங்களாக வெளிவந்தது. அதில் மாபெரும் வெற்றியை பெற்ற படங்கள் என்றால் அது ராகவா லாரன்ஸில் காஞ்சனா மற்றும் சுந்தர் சி இயக்கிய அரண்மனை ஆகிய திரைப்படங்கள் தான். இந்த இரண்டு படங்களுமே இதுவரை மூன்று பாகங்கள் ரிலீஸ் ஆகி இருக்கின்றன.

சுந்தர் சி என்றாலே காமெடி படங்களுக்கு பெயர்போன இயக்குனர் என அனைவருக்கும் தெரியும். அவர் கடந்த 2014-ம் ஆண்டு அரண்மனை படத்தை இயக்கினார். இப்படத்தில் நடிகர் வினய் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்திருந்தார். இதுதவிர நடிகை ஹன்சிகா இப்படத்தில் பேயாகவும், சந்தானம் காமெடி வேடத்திலும் நடித்திருந்தனர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதையடுத்து அரண்மனை படத்தின் 2-ம் பாகத்தை கடந்த 2016-ம் ஆண்டு இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி. இதில் சித்தார்த் நாயகனாக நடிக்க, திரிஷா, பூனம் பாஜ்வா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருந்தனர். காமெடி வேடத்தில் சூரி, கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா இசையில் வெளியான இப்படமும் அமோக வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது.

இதையும் படியுங்கள்... வாரிசு படத்தின் வெற்றியை சிம்பிளாக கொண்டாடிய விஜய்... வைரலாகும் சக்சஸ் மீட் போட்டோஸ்

இதன்பின்னர் அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தை கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்டனர். இப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் சாக்‌ஷி அகர்வால், ஆண்ட்ரியா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்திருந்தனர். விவேக், யோகிபாபு நகைச்சுவை வேடங்களில் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும், பேமிலி ஆடியன்ஸ் கொடுத்த வரவேற்பால் வசூலை வாரிக்குவித்தது.

அரண்மனை 3-ம் பாகத்துக்கு பின்னர் காஃபி வித் காதல் என்கிற ரொமாண்டிக் திரைப்படத்தை இயக்கினார் சுந்தர் சி. கடந்த நவம்பர் மாதம் ரிலீஸ் ஆன இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து இயக்குனர் சுந்தர் சி எந்த படத்தை இயக்கப்போகிறார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, அரண்மனை படத்தின் 4-ம் பாகத்தை இயக்க உள்ளதை சூசகமாக அறிவித்துள்ளார் சுந்தர் சி.

அரண்மனை 4-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் சந்தானமும் நடிக்க இருக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. நேற்று சந்தானம் மற்றும் சுந்தர் சி இருவரும் ஒன்றாக பிறந்தநாள் கொண்டாடினர். இதில் விஜய் சேதுபதியும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தங்களது கூட்டணியை உறுதி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஹாலிவுட் நடிகர்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் கெட்டப்பில் ராதாரவி..! கெத்து காட்டும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!

click me!