தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அப்போது பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் மீது காதல் வயப்பட்ட ஸ்ரீதேவி அவரை கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்கு பின்பும் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.
25
துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்த ஸ்ரீதேவி, அங்கு ஓட்டல் அறையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததால் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டது. நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தினமான இன்று, அவரை பற்றி பல்வேறு பதிவுகளை அவரது கணவர் போனி கபூர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
அதன்படி ஸ்ரீதேவியுடன் ஜோடியாக எடுத்த முதல் புகைப்படத்தை பகிர்ந்த போனி கபூர் அந்த புகைப்படம் கடந்த 1984-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
45
அதேபோல் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் அவர் துபாயில் திருமண விழாவில் தன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ள போனி கபூர், இதுதான் தாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட கடைசி புகைப்படம் என குறிப்பிட்டு உள்ளார்.
55
இதுதவிர மற்றொரு பதிவில், 5 ஆண்டுகளுக்கு முன் நீ எங்களை விட்டு பிரிந்தாலும், உன்னுடைய அன்பும் நினைவுகளும் எங்களை நகர்த்திச் செல்கிறது. எப்போதும் எங்கள் நினைவுகளில் நீ இருப்பாய் என எமோஷனலாக பதிவிட்டுள்ளார் போனி கபூர். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.