
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை இயக்கி, வெற்றி கண்டு வருபவர் இயக்குனர் வெற்றி மாறன். இந்நிலையில், இவரின் இயக்கத்தில் 'அசுரன்' படத்திற்கு பின்னர் வெளியான திரைப்படம் 'விடுதலை'. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்தது.
'பொன்னியின் செல்வன்' படத்தைப் போல இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்த படத்தில், இதுவரை தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறியப்பட்ட சூரி கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூரிக்கு ஜோடியாக இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ.
மேலும் இப்படத்திற்கு தன்னுடைய இசையால் பலம் செய்துள்ளார் இளையராஜா. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கனிம வளங்கள் நிறைத்த மலைப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின், கனிம வளங்களை எடுக்க அரசாங்கம் தனியார் நிறுவனத்திற்கு அனுமதி கொடுக்கிறது. இதனால் தங்களுடைய கனிமங்கள் வளங்கள் மட்டுமின்றி, தங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு, இருக்க கூட இடம் இல்லாமல் விரட்டியடிக்கப்படுவோமோ? என பயம் கொள்ளும் மக்கள், அரசாங்கத்திற்கு எதிராக திரும்புகிறார்கள்.
இந்த போராட்டத்திற்கு தலைவனாக மாறுகிறார் பெருமாள் வாத்தியார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி. தங்களுக்கு எதிராக திரும்பிய மக்களை அடக்குவதற்கு வன்முறையை கையில் எடுக்கும் காவலர்கள், தங்களுடைய அதிகாரத்தை இரக்கமில்லாமல் அவர்கள் மீது காட்டுகிறார்கள். இதில் இறக்க குணம் கொண்ட கான்ஸ்டேபிளாக இருப்பவர்தான் சூரி. பாதிக்கப்படும் மக்களுக்கு எப்படி சூரிய உதவி செய்கிறார்? மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவி சாய்கிறதா... இல்லையா? என பல்வேறு திருப்புமுனைகளோடு இப்படத்தை இயக்கி உள்ளார் வெற்றிமாறன்.
ஒரு காமெடி நடிகரை கமர்சியல் நடிகராக ரசிகர்கள் ஏற்றுக் கொள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் வெற்றிமாறன் இதனை மிகவும் சாமர்த்தியமாக செய்துள்ளார். நேற்றைய தினம் வெளியான இப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், பாராட்டுகளை குவித்து வரும் நிலையில்.. இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
அதன்படி 'விடுதலை' படத்தின் முதல் பாகம், நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் ஆறு கோடி ரூபாயும், உலகம் முழுவதும் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து பாசிடிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதாலும், அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதாலும் படத்தின் வசூல் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.