ஆருத்ரா மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு... வெளிநாடு தப்பியோட்டம்? வெளியான அதிர்ச்சி தகவல்

First Published Apr 1, 2023, 11:50 AM IST

ரூ.2500 கோடி ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காக 2 மாதமாக வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. 

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டது. 

இதனை நம்பி  லட்சக்கணக்கானோர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், இதுதொடர்பாக பலருக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்டு வந்த நிலையில் நடிகர் ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.  அவர் தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து வெளிநாடு தப்பிச் சென்ற ஆர்.கே.சுரேஷை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியாக ஆர்.கே.சுரேஷ் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

click me!