ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் வாரணாசி திரைப்படம் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.
ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஜமௌலி. இவர் பெரியளவில் சர்ச்சைகளில் சிக்குவதில்லை. ஆனால், அவரது படங்கள் காப்பி அடிக்கப்படுவதாக விமர்சனங்கள் உண்டு. அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. அடுத்தடுத்து தன்னுடைய பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். ராஜமெளலி இயக்கத்தில் அடுத்ததாக வாரணாசி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
24
ராஜமெளலி மீது புகார்
மகேஷ் பாபுவின் 'வாரணாசி' பட விழாவில், தொழில்நுட்பக் கோளாறுகளால் ராஜமெளலி பொறுமையிழந்தார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தில் அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடவுள் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றும், அனுமன் துணை நிற்பார் என தந்தை கூறியபோது கோபம் வந்ததாகவும் ராஜமெளலி கூறினார். இது இந்து அமைப்புகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜமௌலியின் பேச்சு இந்துக்கள் மனதைப் புண்படுத்தியதாக 'ராஷ்ட்ரிய வனரசேனா' அமைப்பு சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. அவர் மீது வழக்கு பதியக் கோரியுள்ளனர்.
34
தலைப்புக்கு சிக்கல்
திரைப்படங்களில் இந்து கடவுள்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத நம்பிக்கைகளை புண்படுத்துவது சட்டப்படி தவறு என்பதால், ராஜமௌலி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் திரையுலகில் நடக்காமல் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை முன்வைத்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் வாரணாசி பட தலைப்புக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
வாரணாசி என்ற தலைப்பு எங்களுடையது என்று கூறி திரைப்பட சபையில் ராமபிரம்ம ஹனுமா கிரியேஷன்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. வேறு படத்திற்கு பதிவு செய்த தலைப்பை அனுமதியின்றி எப்படிப் பயன்படுத்தலாம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. தங்களிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. சேம்பரில் இருந்து இது தொடர்பாக ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, எங்கள் அனுமதியின்றி நாங்கள் பதிவு செய்த தலைப்பை அவர்கள் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று தயாரிப்பாளர் விஜய் கே குற்றம் சாட்டினார். இதனால் வாரணாசி படத்தின் தலைப்பு மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.