விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிவிட்டார். இவர் நடிப்பில் உருவான முதல் படம் தி லெஜண்ட். இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்ததோடு, அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிகளவிலான தியேட்டர்களில் வெளியீடு, அதிகாலை 4 மணி காட்சி என அதகளப்படுத்திவிட்டார் அண்ணாச்சி.
இப்படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கி இருந்தனர். மேலும் ஊர்வசி ரவ்துலா, விவேக், ரோபோ சங்கர், யோகிபாபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படம் கடந்த ஜூலை 28-ந் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இது ஒருபுறம் இருந்தாலும், இப்படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் ஊர்வசி ரவ்துலாவுக்கு லெஜண்ட் சரவணன் கொடுத்த சம்பளம் பற்றி தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் அவர் இப்படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளமாக பெற்றுள்ளாராம். கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா கூட இதுவரை இந்த அளவு சம்பளம் வாங்கியதில்லை.
முன்னதாக இப்படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை தான் முதலில் அணுகினர். ஆனால் அவரோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம் நயன். இதையடுத்து தான் பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரவ்துலாவை களமிறக்கிய அண்ணாச்சி, அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக கொடுத்து, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற வைத்துள்ளார்.
இதன்மூலம் கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற அந்தஸ்துடன் இருந்த நடிகை நயன்தாரா, தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததன் காரணமாக, தற்போது அவர் முதலிடத்தை பறிகொடுத்துள்ளார். தற்போது நடிகை நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்...3000 பேர் இதுவே முதல் முறை... நடிகை ரோஜா நிகழ்த்திய வித்தியாசமான கின்னஸ் சாதனை!