சிகிச்சைக்கு பணமின்றி தவித்த பழம்பெரும் நடிகை.. விஷயம் தெரிஞ்சதும் நேரில் வந்து உதவிக்கரம் நீட்டிய அமைச்சர்

First Published Sep 18, 2022, 7:50 PM IST

நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பழம்பெரும் நடிகையான ஜெயக்குமாரி, அந்த காலத்திலேயே கவர்ச்சி நாயகியாக வலம் வந்து ரசிகர்களை வசீகரித்தவர். தற்போது 70 வயதுக்கு மேல் ஆகும் இவர், தனது மகனுடன் வேளச்சேரியில் வசித்து வந்துள்ளார். அதுவும் வாடகை வீடு தானாம். ஆறு வயது முதலே சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர் தனது 14 வயதில் தமிழ் திரையுலகில் வெளியான நாடோடி படத்தின் மூலம் அறிமுகமாகினார். நடிப்பதைவிட சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு அதிக சம்பளம் கொடுத்ததால் அதில் ஆர்வம் செலுத்தி வந்துள்ளார் ஜெயக்குமாரி.

நூற்றுக்கு நூறு, தேடி வந்த லட்சுமி, மாணிக்கத் தொட்டில், இவள் ஒரு சீதை, எங்கிருந்தோ வந்தால், வைரம், ரிக்ஷாக்காரன், பிஞ்சு மனம் உள்ளிட்ட பல பிளாக் பாஸ்டர் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து போனது. தனியார் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாததால், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜெயக்குமாரி.

இதையும் படியுங்கள்... ராதிகாவிற்காக இனியாவை விட்டு கொடுக்கும் கோபி? பாக்கியலட்சுமியில் இனிவரப்போவது !

தமிழில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகைக்கு திரைப்பிரபலங்கள் உதவ முன்வர வேண்டும் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் குரல் கொடுத்து வந்தனர். இந்நிலையில், நடிகை ஜெயக்குமாரி சிகிச்சைக்கு பணமின்றி தவிப்பது குறித்து அறிந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இன்று சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை ஜெயக்குமாரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவருக்கு வீடு மற்றும் உதவித்தொகை வழங்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். மேலும் ஜெயக்குமாரிக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். நடிகை ஜெயக்குமாரியை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரபல தமிழ் நடிகை ..வெளியானது தற்கொலை கடிதம்

click me!