நீயா நானா-வில் படிக்காத கணவனை ஏளனமாக பேசிய மனைவிக்கு ஆதரவாக குரல்கொடுத்த பிரபல கவிஞர்

First Published Sep 13, 2022, 11:25 AM IST

Neeya Naana : கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சியில், கணவனை ஏளனமாக பேசிய பெண்ணிற்கு ஆதரவாக கவிஞர் தாமரை பதிவிட்டுள்ள முகநூல் பதிவு வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்நிகழ்ச்சி இந்த அளவுக்கு பேமஸ் ஆனதற்கு காரணமே அதனை நேர்த்தியாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத் தான். இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் விஷயங்கள் சில நேரங்களில் பேசுபொருளாகவும் ஆவதுண்டு.

அந்த வகையில் கடந்த ஞாயிறன்று ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில், கணவனை விட அதிகம் சம்பாதிக்கு மனைவிமார்களும், அவர்களுடைய கணவன்மார்களும் கலந்துகொண்டனர். இதில் ஒரு பெண் தனது கணவர் தனது மகளின் ரேங்க் கார்ட்டை ஒரு நேரமாக பார்ப்பாம் என்றும் அவருக்கு எதுவும் படிக்க தெரியாது என்றும் ஏளனமாக பேசினார். அதற்கு அந்த தந்தை சொன்ன பதில் தான் அனைவரையும் கலங்க செய்தது.

தன்னால் முடியாததை தனது மகள் சாதித்துவிட்டால் என்ற சந்தோஷத்தில் தான் ரேங்க் கார்டை ஒரு மணிநேரம் பார்ப்பதாக கூறியதை கேட்டு நெகிழ்ந்துபோன கோபிநாத், அவர் தனக்கு காவியமாகத் தெரிகிறார் எனக் கூறி பரிசளித்த உணர்வுப் பூர்வமான தருணம் அந்நிகழ்ச்சியில் அரங்கேறியது. இதில் கணவனை ஏளனமாக பேசிய அந்த பெண்ணை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து ட்ரோல் செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்... பைக் ரைடிங்கின் போது... புத்தர் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்து வழிபாடு செய்த அஜித் - வைரலாகும் வீடியோ

இந்நிலையில், அந்த பெண்ணுக்கு ஆதரவாக கவிஞரும், பாடலாசிரியருமான தாமரை முகநூலில் பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில் அவர் தெரிவித்துள்ளதாவது : “அம்மாக்கள் இல்லையென்றால் குழந்தைகள் பள்ளிப் படிப்பைக் கூடத் தாண்டா என்று சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன் ( சொந்த அனுபவம் ). படித்த தாயார் தன் குழந்தையைப் படிக்க வைக்க, கண்டிப்பாகத்தான் இருப்பார் - வீட்டிலுள்ள அனைவரிடமும்! 

அதையெல்லாம் பொதுவில், ஒரு கணத்தில் பார்த்து விட்டு பெண்களே இப்படித்தான் என்று எடை போடுவது தவறு! பெரும்பாலான பெண்கள் வீட்டுவேலையும் செய்து, படித்த படிப்புக்கு வெளிவேலையும் செய்து குழந்தை வளர்ப்பும் செய்...இன்னும் பல செய்துகள்... கடுமையும் விரைவுபடுத்தலும் இருந்தே தீரும்.

உண்மையில் இத்தகைய பெண்களால்தான் அந்தந்தக் குடும்பங்கள் ஒரு காலகட்டத்துக்குப் பிறகு தலைநிமிரும். அப்போதுதான் குழந்தைகளுக்கும் வீட்டில் மற்றவர்களுக்கும் அருமை தெரியும். இந்தப் பெண்களெல்லாம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு வந்து பேசத் தெரியாமல் பேசி தங்களுக்குத் தாங்களே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள். கோபிநாத் இங்கே நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரது மனைவி அங்கே குழந்தைக்குப் படிப்புச் சொல்லிக் கொடுத்து 'பிராக்ரஸ் ரிப்போர்ட்'டில் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கக் கூடும்!” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் தாமரை.

இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே முடியல... அதற்குள் ரூ.180 கோடி வசூல்..! ரிலீசுக்கு முன்பே கல்லா கட்டிய விஜய்யின் ‘வாரிசு’

click me!