இவர் திருவள்ளூர் கலைக்கூடம் என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் கருத்தான படங்களை இயக்கி, தயாரித்து வந்தார். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கனும், பொறந்த வீடா புகுந்த வீடா, நான் பெத்த மகனே, எல்லாமே என் பொண்டாட்டி தான் போன்ற திரைப்படங்களில் மனைவி, மாமியாரை மையமாக வைத்து, குடும்ப ஒற்றுமையை வி சேகர் பேசி இருந்தார்.
ஒன்னா இருக்க கத்துக்கணும், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற படங்களில் குடும்ப ஒற்றுமையை பிரதீபலித்த சேகர், வரவு எட்டணா செலவு பத்தணா, விரலுக்கேத்த வீக்கம் போன்ற படங்களில் சிக்கனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தனது திரைப்படங்களில் வேலைவாய்ப்பின்மை, மோசடி அரசியல்வாதிகள் என சமூக அவலங்களையும், நகைச்சுவை கலந்து தந்தவர் வி சேகர்.