H Vinoth Reveals the Truth Behind the Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படம் லீக் ஆனது குறித்து இயக்குநர் எச்.வினோத் முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
நடிகர் விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இணையத்தில் கசிந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் குறித்து நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த இயக்குநர் எச். வினோத், தற்போது முதல் முறையாக விரிவாக விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் ரங்கராஜ் பாண்டேவுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அவர், படம் கசிந்த விவகாரத்தில் பலரும் தவறாக புரிந்துகொண்ட விஷயங்களையும், காவல்துறை விசாரணையில் தெரியவந்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
26
'நாங்களே லீக் செய்தோம்' என்ற குற்றச்சாட்டு தவறு
படத்தை படக்குழுவே திட்டமிட்டு கசியவிட்டதாக அப்போது பல்வேறு கருத்துகள் பரவின. ஆனால் அந்த குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த எச். வினோத், அப்படி ஏதேனும் நடந்திருந்தால் அன்றைய சூழ்நிலையில் விசாரணை அமைப்புகள் மிக எளிதாக உண்மையை கண்டுபிடித்திருக்கும் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாநில மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் முழுமையாக விசாரணையில் ஈடுபட்டதாகவும், ஒரு எஸ்பி, பல டிஎஸ்பிக்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய சிறப்பு குழு இரவு பகலாக விசாரணை நடத்தியதாகவும் அவர் கூறினார்.
36
எடிட்டிங் குழு மீது சந்தேகம்
கசிந்த வீடியோவில் எடிட்டிங் தொடர்பான குறிப்புகள் இருந்ததால், முதலில் விசாரணை முழுவதும் எடிட்டிங் பிரிவை மையமாகக் கொண்டு நடைபெற்றதாக எச். வினோத் தெரிவித்தார். எடிட்டிங் குழுவில் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவர்களின் கணினிகள், கோப்பு பரிமாற்றங்கள், கிளவுட் சேமிப்புகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக கூகுள் டிரைவ் உள்ளிட்ட ஆன்லைன் சேமிப்பு வசதிகள் மூலமாக தகவல் வெளியேறியதா என்பதையும் நேரடியாக கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அதிகாரிகள் சரிபார்த்ததாக அவர் கூறினார்.
ஆனால் அந்த வழியில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அதன்பிறகு விசாரணை வேறு கோணத்தில் சென்றதாகவும், படத்தின் ஹார்ட் டிஸ்க் நகலெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததாகவும் வினோத் தெரிவித்தார். விசாரணையில், எடிட்டிங் குழுவில் ஃப்ரீலான்ஸராக பணியாற்றிய இளைஞர் ஒருவரின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஒவ்வொரு கட்டத்திலும் ஹார்ட் டிஸ்க்களை எடுத்துச் செல்லும் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் படத்தின் காட்சிகளை நகலெடுத்ததாக விசாரணையில் தெரியவந்ததாக எச். வினோத் கூறினார்.
56
தனியாக படத்தை எடிட் செய்த நபர்
நகலெடுக்கப்பட்ட காட்சிகளை அந்த நபர் தனியாக தொகுத்து, ஆடியோ இணைத்து, முழுப் படமாக உருவாக்கி பார்த்ததாகவும், அந்த நேரத்தில் அறையில் சுமார் 15 பேர் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்பிறகு அந்த நபரிடமிருந்து நண்பர்கள், அவர்களது அறிமுகங்கள் என பலரிடம் படம் மெதுவாக பரவியிருக்கலாம் என்பதே காவல்துறையின் முக்கிய கண்டுபிடிப்பாக இருந்ததாக வினோத் விளக்கினார். எனினும், இந்த சம்பவத்தில் இன்னும் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
66
இன்னும் நீங்காத ஒரு சந்தேகம்
காவல்துறை தீவிர விசாரணை நடத்தியபோதும், சம்பந்தப்பட்ட நபர் எந்த முக்கிய தகவலையும் வெளியிடவில்லை. பின்னர் எடிட்டர் அந்த பையனிடம் தனியாக விசாரித்தபோது, அவர் மன்னிச்சிடுங்க அண்ணானு சொல்லி கண்ணீர்விட்டு அழுததாகவும், அதற்கு மேல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும் வினோத் கூறினார். இதனால், இந்த கசிவுக்கு பின்னால் வேறு யாரேனும் இருந்தார்களா என்ற சந்தேகம் இன்னும் நீங்கவில்லை என்றும், அதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் எச். வினோத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.