கற்றது தமிழ், தங்கமீன்கள் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மாரி செல்வராஜ். இவர் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பா.இரஞ்சித் தயாரித்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று பல்வேறு விருதுகளையும் வென்று குவித்தது.
இதையடுத்து தனுஷ் நடித்த கர்ணன் படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். இப்படம் கடந்த ஆண்டு திரையரங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் செய்தது. கர்ணன் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார். இப்படத்தை பா.இரஞ்சித் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.
ஆனால் தான் அடுத்ததாக கலையரசன் நடிக்கும் வாழை என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் மாரி செல்வராஜ். வாழை படம் குறித்த அறிவிப்பு வெளியானதும் நெட்டிசன்கள் பெரும்பாலானோர் எழுப்பிய ஒரே கேள்வி துருவ் விக்ரம் படம் என்ன ஆனது என்பது தான். சிலரோ அப்படத்தை மாரி செல்வராஜ் டிராப் பண்ணிவிட்டதாக வதந்திகளை பரப்பினர்.