
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் கோவையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். சினிமாவின் மீது தீரா காதல் கொண்ட லோகேஷ் கனகராஜ், எப்படியாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு, இருந்த அவருக்கு சினிமா கற்றுத்தந்தது கமல்ஹாசனின் படங்கள் தான். கமலின் தீவிர ரசிகரான லோகேஷ், அவர் படத்தை பார்த்து தான் சினிமாவையே கற்றுக்கொண்டாராம்.
அந்த சமயத்தில் அவர் இயக்கிய குறும்படம் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதை தன்னுடைய அவியல் என்கிற ஆந்தாலஜி படத்தோடு இணைத்து ரிலீஸ் செய்தார். அந்த குறும்படத்துக்கு பின்னர் லோகேஷுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. அப்படி அவர் இயக்கிய முதல் படம் தான் மாநகரம். அப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஸ்ரீ, சந்தீப் கிஷான், ரெஜினா நடிப்பில் த்ரில்லர் படமாக மாநகரம் படத்தை இயக்கி இருந்தார் லோகி. அப்படம் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது.
பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை இயக்கியதை மூலம் பாப்புலர் ஆனார் லோகேஷ் கனகராஜ். அப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட லோகி, தளபதிக்கு தரமான ஹிட் படமாக மாஸ்டரை கொடுத்தார். மாஸ்டர் படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனராக உயர்ந்தார் லோகி.
இதையும் படியுங்கள்... உனக்கு இவ்ளோ சம்பளமாடா? முத்து படத்துக்காக கே.எஸ்.ரவிக்குமார் கேட்ட சம்பளம் - ஆடிப்போன கே.பாலச்சந்தர்
மாஸ்டர் படத்தை இயக்கி முடித்த கையோடு, தனது சினிமா குருவான கமல்ஹாசன் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட லோகி, ஒரு ஃபேன் பாய் சம்பவமாக விக்ரம் படத்தை கொடுத்தார். கமல்ஹாசன் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக விக்ரம் அமைந்தது. அதுமட்டுமின்றி அப்படத்தின் மூலம் லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்ஸ் என்கிற கான்செப்டையும் அறிமுகம் செய்துவைத்தார்.
அதன்பின்னர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ். அப்படத்தையும் தன்னுடைய சினிமேட்டிக் யூனிவர்ஸுக்குள் கொண்டுவந்து பிரம்மிப்படைய வைத்தார். இப்படி அவர் இயக்கத்தில் வெளிவந்த 5 படங்களும் அதிரிபுதிரியான வெற்றியடைந்ததால், அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் இயக்கி வரும் கூலி படத்துக்காக அவருக்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரஜினி படத்தை முடித்த கையோடு கைதி 2, விக்ரம் 2, இரும்புக்கை மாயாவி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள லோகி, இந்தியில் அமீர்கானை வைத்து ஒரு படத்தையும் இயக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படி இவர் இயக்கும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட, லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கூலி படத்துக்கு முன்னர் வரை ரூ.50 கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்த லோகேஷ் கனகராஜ், அப்படத்திற்கு பின் 100 கோடி சொத்துக்கு அதிபதியாக மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே! ஜீன்ஸ் பட பாடலுக்காக ஐஸ்வர்யா ராய் அணிந்த ஆடைகளின் அசர வைக்கும் பின்னணி