யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்பட சமூக வலைதளங்களில் வணிக நோக்கத்திற்காக இசைஞானி இளையராஜாவின் பெயரையும் புகைப்படத்தையும் பயன்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், இசை அமைப்பாளர் இளையராஜா சமூக வலைத்தளங்களில் தனது பெயர், புகைப்படம் மற்றும் குரலை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளார். மேலும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை நீக்கவும், அவற்றின் மூலம் கிடைத்த வருமான விவரங்களை சமர்ப்பிக்கவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
24
இளையராஜா வழக்கு
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன் விசாரணைக்கு வந்த போது, “இளையராஜா புகழிற்கு இசை தான் அடிப்படை. புகைப்படம் அல்லது பெயர் பயன்படுத்தப்படுவதை எப்படி பாதிப்பதாகக் கருதுகிறீர்கள்?” என்று நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார் . இதற்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன், “சில யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள், அவரின் பெயர் மற்றும் படங்களை பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் மீம்ஸ் உருவாக்குகின்றன. இது அவருடைய மரியாதைக்கும், பிரபலத்திற்கும் களங்கம் விளைவிக்கிறது,” என்று தெரிவித்தார். இதற்கான வீடியோ, புகைப்பட ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
34
இளையராஜா புகைப்படத்தை பயன்படுத்த தடை
மேலும், இதேபோன்ற புகழ் உரிமை மீறல் தொடர்பான தீர்ப்புகள் டில்லி நீதிமன்றம் வழங்கி உள்ளதையும், சென்னை உயர்நீதிமன்றம் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட அதே கோட்பாடு இளையராஜாவின் வழக்கிற்கும் பொருந்தும் என்று வழக்கறிஞர் வாதிட்டார். அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இளையராஜாவின் பெயர், புகைப்படங்களை வணிக நோக்கத்திற்காக யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.
சமீபத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில் அவருடைய பாடல்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்பட்ட விவகாரத்திலும் இளையராஜா நீதிமன்றத்தை நாடியிருந்தார். இத்தனை நாட்களாக தன்னுடைய பாடல்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்து வந்த இளையராஜா, தற்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ள விவகாரம் தமிழ் சினிமாவில் பேசுபொருள் ஆகி உள்ளது.