நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தை சுதா கொங்கரா இயக்கி இருந்தார். 1 ரூபாய்க்கு விமான டிக்கெட்டை அறிமுகப்படுத்தி அசர வைத்த ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதில் சூர்யா மாறா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க, கருணாஸ், காளி வெங்கட், ஊர்வசி, கேகே, விவேக் பிரசன்னா என ஏராளமானோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
தேசிய விருது வென்ற சூர்யாவுக்கும், சூரரைப் போற்று படக்குழுவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், சர்ச்சைக்குரிய விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்ததன் பின்னணியில் அரசியல் இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது, தேசிய திரைப்பட விருது குழுவில் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை என்பவர் இடம்பெற்று இருந்ததாகவும். அவரால் தான் சூர்யாவுக்கு விருது கிடைத்தது என்பது போலும் பிஸ்மி என்பவர் பதிவிட்ட பதிவை குறிப்பிட்டு “மிஸ்டர் சூர்யா... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.