துணிவு படம் பார்க்க விடாததால்... ஆத்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர்

First Published Jan 20, 2023, 12:31 PM IST

துணிவு பட கொண்டாட்டத்தின் போது பாரத் என்கிற அஜித் ரசிகர் உயிரிழந்த நிலையில், தற்போது வீரபாகு, துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அஜித் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் கடந்த ஜனவரி 11ந் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டி இருந்தார். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

துணிவு படம் ரிலீஸ் ஆனபோது சென்னையில் உள்ள ரோகினி தியேட்டர் வெளியே ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... ரீல் விட்டாரா தில் ராஜு? வாரிசு படம் 210 கோடி வசூலிக்க வாய்ப்பே இல்ல.. அடிச்சு சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு அஜித் ரசிகர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் வீரபாகு. தீவிர அஜித் ரசிகரான இவர், துணிவு படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது வீரபாகு மது அருந்திவிட்டு வந்ததால் அவரை தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில், அவரை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் வீரபாகுவை தவிர்த்து அவரது குடும்பத்தினரை மட்டும் தியேட்டரில் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்து போன வீரபாகு, வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே துணிவு பட கொண்டாட்டத்தின் போது பாரத் என்கிற அஜித் ரசிகர் உயிரிழந்த நிலையில், தற்போது வீரபாகு, துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே அதிகபட்ச பணத்தொகையுடன் வெளியேறினார் அமுதவாணன் - அதுவும் இத்தனை லட்சமா?

click me!