கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது - கலங்கிய பானுப்ரியா

First Published Feb 6, 2023, 2:20 PM IST

பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

1980-களிலும், 90களிலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பானுப்ரியா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பிறமொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை பானுப்ரியா, நடனத்திலும் சிறந்து விளங்கினார். இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அபிநயா என்கிற மகளும் உள்ளார்.

இவர் கடைசியாக தமிழில் பாண்டிராஜ் இயக்கிய கடைக்குட்டி சிங்கம் மற்றும் அசோக் செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களில் நடித்திருந்தார். அதன்பின் பட வாய்ப்புகள் இன்றி தவித்து வரும் நடிகை பானுப்ரியா, தனக்கு நினைவாற்றல் குறைந்துவிட்டதாக சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை பானுப்ரியா, தனது தற்போதைய நிலை குறித்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “எனது கணவர் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்த பின்னர் எனக்கு நினைவாற்றல் மிகவும் குறைந்துவிட்டது. எதையும் நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. மனமும் வெறுமையாகிவிட்டது. ஷூட்டிங்கில் டயலாக் மறந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக தான் இப்படி நடக்கிறது” என கூறினார்.

இதையும் படியுங்கள்... வேலையே இல்ல.. கடும் மன உளைச்சல் வேற... அட பாவமே தனுஷூக்கே இந்த நிலைமையா..!

தன்னைப் பற்றி பரவிய வதந்திகள் குறித்து அவர் பேசுகையில், நான் என் கணவனை விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் பரவின. அது எதுவும் உண்மையில்லை. தற்போது என் கணவர் உயிருடன் இல்லாததால் அதைப்பற்றி நான் பேச விரும்பவில்லை. 3 ஆண்டுகளுக்கு முன் எனது உடல்நிலை குறித்தும் வதந்திகள் பரவின. அப்போது நடிகை ராதா பதறியடித்து வந்து என்னிடம் நலம் விசாரித்தார் என பானுப்ரியா தெரிவித்தார்.

அதேபோல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 80ஸ் நடிகர், நடிகைகளின் ரீயூனியன் நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ள வில்லை என்கிற கேள்விக்கு, தனக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என பதிலளித்தார் பானுப்ரியா. தற்போது முழுநேரமும் வீட்டிலேயே இருப்பதாகவும், புத்தகம் படிப்பது, பாடல்களைக் கேட்பது, வீட்டு வேலைகளை செய்வது என தன்னை பிசியாக வைத்துக்கொள்வதாக அவர் தெரிவித்தார். 

அதேபோல் அவரது ஒரே மகளான அபிநயா, தற்போது லண்டனில் பட்டப்படிப்பு படித்து வருவதாகவும் பானுப்ரியா அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஒருகாலத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த பானுப்ரியா, தற்போது நினைவாற்றல் குறைந்துவிட்டதாக கூறியதைக் கேட்டு ரசிகர்கள் மனமுடைந்து போய் உள்ளனர்.

இதையும் படியுங்கள்... செம்ம எனர்ஜியுடன் இறங்கி ஆடிய விஜய்... ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ரஞ்சிதமே வீடியோ சாங் வந்தாச்சு

click me!