Indian Railways Train Booking: IRCTC-ன் புதிய பீட்டா தளம் மூலம் தட்கல் டிக்கெட் முன்பதிவு வேகம் அதிகரித்துள்ளது. முதல் 3 நிமிடங்களில் தட்கல் டிக்கெட் கன்பார்ம் செய்து விட முடியும். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
ரயில் பயணிகளுக்கு ஒரு முக்கிய செய்தியாக, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC), தனது புதிய பீட்டா வெர்ஷன் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தளம், தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் மூன்று நிமிடங்களில் முன்பதிவு வெற்றி விகிதத்தை 5% அதிகரித்துள்ளதாக IRCTC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜூலை 15, 2026 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தளம், பயணிகளுக்கு வேகமான மற்றும் எளிமையான டிக்கெட் முன்பதிவு அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவின் பங்கு ஜூலை 2026-ல் 89.84% ஆக உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதங்களை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, ரயில் நிலையங்களில் உள்ள நேரடி முன்பதிவு மையங்களின் (PRS counters) சுமை கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் IRCTC குறிப்பிட்டுள்ளது.
24
தட்கல் முன்பதிவில் என்ன மாற்றம்?
புதிய பீட்டா தளம் அறிமுகமான பிறகு, தட்கல் முன்பதிவு நேரத்தில் டிக்கெட் புக் ஆகும் வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முன்பதிவு தொடங்கிய முதல் 3 நிமிடங்களுக்குள் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை 5% உயர்ந்துள்ளது. இதேபோல், முதல் 5 நிமிடங்களில் 3% மற்றும் 30 நிமிட கால அளவில் 2% வளர்ச்சி பதிவாகியுள்ளது.
தட்கல் நேரத்தில் நிலவும் கடும் போட்டியைச் சமாளிக்க இந்த வேக அதிகரிப்பு பயணிகளுக்குப் பேருதவியாக இருக்கும். பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தேவையற்ற 'கேப்சா' (CAPTCHA) மற்றும் திடீரெனத் தோன்றும் 'பாப்-அப்' செய்திகள் போன்ற இடையூறுகள் இந்த புதிய தளத்தில் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. இது முன்பதிவு அனுபவத்தை மேலும் எளிதாக்குகிறது.
34
பயணிகளுக்கான புதிய வசதிகள் என்னென்ன?
இந்த புதிய தளத்தில் பயணிகளின் வசதிக்காகப் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, ஸ்லீப்பர், ஏசி 3 டயர், ஏசி 2 டயர் போன்ற பல்வேறு வகுப்புகளில் உள்ள டிக்கெட் இருப்பை ஒரே திரையில் ஒப்பிட்டுப் பார்க்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால், பயணிகள் வெவ்வேறு பக்கங்களுக்குச் செல்லாமல், ஒரே பார்வையில் தங்களுக்குத் தேவையான வகுப்பைத் தேர்வு செய்ய முடியும். 'கிளாஸ்மார்ஃபிசம்' (Glassmorphism) போன்ற நவீன டிசைன் அம்சங்களுடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது லாக்-இன் செய்வதிலிருந்து டிக்கெட் உறுதி செய்யப்படும் வரை, முன்பை விட ஒரு சிறந்த பயனர் அனுபவத்தை வழங்குகிறது.
தகவல்கள் மிகவும் சீரான மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவில் காட்டப்படுவதால், முன்பதிவு செயல்முறை எந்த சிரமமும் இல்லாமல் நடப்பதாக IRCTC விளக்கியுள்ளது. தற்போது பீட்டா சோதனையில் உள்ள இந்த இணையதளம், பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் தொடர்ந்து மேம்படுத்தப்படும் என்றும் IRCTC உறுதியளித்துள்ளது. இதன் மூலம், NGeT தளத்தில் உயர்தரமான மற்றும் தடையற்ற சேவையை வழங்குவதே நோக்கம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.