
விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு அஷ்டம ஸ்தானத்தில் நின்று பலனளித்த குரு பகவான், குரு பெயர்ச்சிக்குப் பின்னர் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறப் போகிறார். விருச்சிக ராசியின் இரண்டு மற்றும் ஐந்தாம் வீடுகளின் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவது சிறப்பான பலன்களைத் தரும். மேலும் குருவின் ஐந்தாம் பார்வை உங்கள் ராசியிலும், ஏழாம் பார்வை மூன்றாம் வீடான சகாய ஸ்தானத்திலும், ஒன்பதாவது பார்வை ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிய இருக்கிறது. இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
குரு பெயர்ச்சிக்குப் பின்னர் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வந்து குவிய இருக்கிறது. அதை வாங்கித் தந்த பெருமை குரு பகவானைச் சேரும். சமூகத்தில் அந்தஸ்து, புகழ், கௌரவம் என வாழ்வில் ஒட்டுமொத்த மாற்றங்கள் ஏற்பட உள்ளது. சகலவிதமான காரிய சித்திகளும் உண்டாகும். பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற கிரகம் ஜாதகருக்கு அதிர்ஷ்டகரமான அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் உச்சம் பெறுவதால் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்.
இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்க விரும்பிய அனைத்து இன்பங்களும் உங்களுக்கு கிடைக்கும். அஷ்டம குருவால் ஏற்பட்ட அவமானங்கள் விலகும். உடன் பிறந்தவர்கள், வாழ்க்கைத் துணை, மனைவி, மக்கள், பெற்றோர்கள் என அனைவரின் ஆதரவு கிடைக்கும். பிறவிக் கடனை தீர்க்க காலங்கள் உருவாகும். உங்கள் உள்ளத்திலும், உடலிலும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். தெய்வீக ஆற்றலுடன் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த தடை, தாமதம் அனைத்தும் அகலும்.
குருவின் ஐந்தாம் பார்வை ராசியின் மீது விழுகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அதிபதி பாக்கிய ஸ்தானத்திற்கு செல்வதால் அபரிமிதமான பலன்கள் கிடைக்கும். உடலும், உள்ளமும் மகிழ்ச்சியில் திளைக்கும் வண்ணம் நல்ல சம்பவங்கள் நடக்கும். மனரீதியான பிரச்சனைகள் சீராகும். நேர்மறை எண்ணங்கள் பெருகும். பொறுமையும், புத்திக் கூர்மையும், சகிப்புத்தன்மையும் அதிகரிக்கும். வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றங்கள் கிடைக்கும்.
உங்கள் பற்றி தவறாக பேசியவர்கள், அவதூறு பேசியவர்கள் உண்மைகளை உணர்ந்து வருந்துவார்கள். உங்கள் மேல் விழுந்த நீதிமன்ற வழக்குகளில் வெற்றிகளை பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், ராசி ஆகியவை வலுப்பெறுவதால் அசுப பலன்கள் உங்களை விட்டு அகலும். வெற்றிப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். தடைபட்ட அனைத்து செயல்களும் இந்த ஓராண்டுக்குள் நடந்து முடியும்.
குருவின் 7 ஆவது பார்வை மூன்றாம் வீடான சகாய ஸ்தானத்தில் பதிகிறது. எனவே வாழ்க்கையின் சூழ்நிலை ஒட்டுமொத்தமாக மாறும். அதிர்ஷ்டத்தை நீங்கள் தேடி செல்ல வேண்டாம். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். வேலைப்பளுவினால் ஏற்பட்ட அழுத்தங்கள் குறையும். குறைவான உழைப்பில், நிறைவான வருமானம் கிடைக்கும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். விடாமுயற்சியும், தைரியமும் மேலோங்கும். அனைத்து பிரச்சினைகளையும் தனி ஒரு ஆளாக எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றல்களைப் பெறுவீர்கள். சொத்து ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் சீராகும். அடமானத்தில் இருந்த சொத்துக்கள், நகைகளை மீட்டு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகளை சரி செய்வீர்கள்.
குருவின் ஒன்பதாம் பார்வை ஐந்தாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் விழுகிறது. இதன் காரணமாக அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு கிடைக்கும். திறமைகள் கைகூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கையில் புது வசந்தம் வீசும். மனப்புழப்பத்தில் இருந்தவர்கள் தெளிவாக உணர்வீர்கள். உங்கள் தடைக்கற்கள் படிக்கற்களாக மாறும். எதிர்காலத்தில் நடக்கப் போவதை உணர்ந்து முன்னேற்பாடுகளை செய்வீர்கள். குலதெய்வம் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். சிலருக்கு முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் வரக்கூடும். திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற சகல விதமான பலன்களும் கிடைக்கும். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீரும்.
02-06-2026 முதல் 18-06-2026 வரை 16 நாட்கள் குரு பகவான் தனது சொந்த நட்சத்திரமான புனர்பூசத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அனைத்து சுப பலன்களையும் தரும். அதிர்ஷ்டம் தேடிவரும். திருமண யோகம் கைகூடும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். சிலருக்கு கோச்சார ராகு கேதுவால் திருமணத்தில் தடைகள் ஏற்படலாம். ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் திருமணம் நடத்துவது நல்லது. சிலருக்கு புதிய காதல்கள் மலரக்கூடும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள்.
19-06-2026 முதல் 19-08-2026 வரை சனி பகவானின் சொந்த ராசியான பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான் பயணிக்க இருக்கிறார். இதன் காரணமாக புதிய தன்னம்பிக்கை, சிந்தனைகள், உத்திகள் தோன்றும். விடாமுயற்சியுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பாகப்பிரிவினை சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய வீடு கட்டி குடியேறும் வாய்ப்புகள் கிடைக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு புத்திர பேறு கிடைக்கும். மனதை மகிழ்விக்கும் வகையில் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். மன நிம்மதியாக உணர்வீர்கள்.
20-08-2026 முதல் 31-10-2026 வரையும் 15-04-2027 முதல் 26-06-2027 வரையும் புதன் பகவான் ஆயில்ய நட்சத்திரம் சஞ்சாரம் செய்வார். இந்த காலகட்டத்தில் நீங்கள் விடா முயற்சியோடு செய்த அனைத்து காரியங்களுக்கும் வெற்றிகள் தேடி வரும். ஆரோக்கியத்தில் இருந்த தொல்லைகள் சரியாகும். அறுவை சிகிச்சை வரை சென்ற பிரச்சனைகள் சாதாரண வைத்தியம் மூலம் சீராகும். சகோதரி அல்லது சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். தாய் வழியிலிருந்து சொத்துக்களும், சீதனமும் கிடைக்கலாம்.
26-01-2027 முதல் 13-04-2027 வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் வக்ர கதியில் அதாவது பின்னோக்கி சஞ்சரிப்பார். இந்த சமயத்தில் குருவும், கேதுவும் இணைவதால் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரலாம். கொடுக்கல், வாங்கலில் இழப்புகள் ஏற்படலாம். குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்வதைத் தவிர்க்கவும். மன அமைதி குறையும் வகையில் சம்பவங்கள் நடக்க வாய்ப்பு இருப்பதால் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
01-11-2026 முதல் 13-12-2026 வரை குரு பகவான் அதிசாரமாக சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இந்த நாட்களில் அவர் சிம்ம ராசியில் இருக்கும் கேதுடன் இணைவதால் சுயதொழில் செய்பவர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். தொழிலில் புதிய முதலீடுகள் கிடைக்கும். தடைபட்ட கல்வி மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.
14-12-2026 முதல் 25-01-2027 வரை சிம்ம ராசியில் வக்ர கதியில் குரு பகவான் சஞ்சரிப்பார். சுமார் 85 நாட்கள் அதிசாரம் மற்றும் வக்ர கதியில் குரு பகவான் பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் சிறிது கவனத்துடன் இருக்க வேண்டும். “பத்தாமிடத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும்” என்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் சுய ஜாதகத்தை அறிந்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டியது அவசியம்.
வேல் வழிபாடு செய்வது நன்மை தரும். வேலுக்கு அபிஷேகம் செய்து, மாலை சாற்றி வேல்மாறல் பதிகம் பாடி பூஜை செய்து வழிபடுவது எதிர்ப்புகளை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)