தாலி கட்டும் நேரத்தில் எஸ்கேப்பான மணமகள் ! கூரைப்பட்டு கட்டி வருவதாக கூறி ரூமுக்குள் சென்றவர் காதலனுடன் தப்பி ஓட்டம் !!

By Selvanayagam PFirst Published Sep 3, 2019, 8:29 AM IST
Highlights

வேலூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் பட்டுச்சேலை கட்டிவர அறைக்குள் சென்ற மணப்பெண் காதலனுடன் தப்பி ஓட்டம் பிடித்தார். இதனால்  திருமணம் நின்று போனது.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அணங்காநல்லூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி. அவருடைய மகன் விநாயகம் . கட்டிட மேஸ்திரி. இவருக்கும், அவருடைய உறவினரான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த 20 வயது இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இவர்களது திருமணம் நேற்று குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் திருமண மண்டபத்தில் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவே மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் திருமண மண்டபத்திற்கு வந்திருந்தனர். இரவில் மணமக்கள் அழைப்பு நடைபெற்று அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

அதன் பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர். நேற்று அதிகாலை மீண்டும் திருமண வீடு களைகட்டியது. தாலிகட்டும் நிகழ்ச்சிக்காக மணமேடை தயார் ஆனது. மணப்பெண்ணுக்கு திருமண சடங்கு நடைபெற்றது. பின்னர் திருமண பட்டுச்சேலை கட்டிவர மணப்பெண் அறைக்கு சென்றார்.

மணமகன் மற்றும் உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் மகிழ்ச்சியுடன் காத்து இருந்தனர். ஆனால் பட்டுச்சேலை கட்டி வரச்சென்ற மணமகள் நீண்ட நேரமாகியும் வராததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். மணமகள் அறைக்கு சென்று பார்த்த போது அவர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


அந்தப் பெண் ஏற்கனவே படிக்கும் போது சக மாணவனைக் காதலித்தாகவும், விஷயம் தெரிவர அந்தப் பெண்ணின் பெற்றோர் வலுக்கடாயமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து செல்போன் மூலம் தன் காதலனை திருமண மண்டபத்துக்கு வரவழைத்த அந்தப் பெண் சுவர் ஏறிக் குதித்து அங்கிருந்து காதலனுடன் தப்பிச் சென்றார்.


மணமக்களை வாழ்த்துவதற்காக மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து வெளியேறினார்கள். திருமணகளை கட்டி இருந்த மண்டபம் வெறிச்சோடியது.

மணப்பெண்ணின் பெற்றோர் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மணப்பெண் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

click me!