’மக்கள் மனதிலிருந்து என்றுமே உதிராத பூ மகேந்திரன்’...விஜயகாந்த், தயாரிப்பாளர் சங்கம் புகழாரம்...

By Muthurama LingamFirst Published Apr 2, 2019, 3:16 PM IST
Highlights

தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த திரையுலகமும் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தும் தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த திரையுலகமும் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தும் தனது இரங்கல் செய்தியை அனுப்பியுள்ளார்.

 சற்று முன்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் உடல் நலக்குறைவால் காலமானார் என்கிற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவர் திரையுலகில் நல்ல குடும்ப கதைகளை தந்து கலையுலகத்திற்கு பெருமையை சேர்த்தவர். அவரது இழப்பு திரையுலகிற்கு மிகப்பெரிய ஒரு இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் மகேந்திரனின் மறைவுக்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’தமிழ் சினிமாவின் முக்கிய பிரபல இயக்குநர்களில்  மிகவும் போற்றுதலுக்குரியவர் மகேந்திரன். அவருடைய படைப்புகளான 'முள்ளும் மலரும்', 'மெட்டி', போன்ற திரைப்படங்கள், மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும், ஆழமான கதையம்சம் கொண்டதாகவும், காட்சியமைப்புகள் மிகவும் அழகாகவும் இருக்கும். அதனால்தான் இன்றளவும் மக்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறார் மகேந்திரன்.

குறிப்பாக, 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் அன்றைய காலகட்டம் அல்லது இன்றைய தலைமுறைகளிடம் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. வருங்காலத்தில் சினிமா எடுக்கவரும் இயக்குநர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாய் இருக்கும்.கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். அதுமட்டுமின்றி, சமீபத்தில் இயக்குநர் அல்லாமல் நடிப்பிலும் அனைவராலும் ஈர்க்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சினிமா எனும் தோட்டத்தில் உதிர்ந்த பூ. அதேசமயம், மக்களின் மனதிலும், சினிமா கலைஞர்கள் மனதிலும் என்றுமே உதிராமல் இருக்கும் பூ. இயக்குநர் மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பிலும், ஒட்டுமொத்தத் திரையுலகின் சார்பிலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!