மனைவி மற்றும் குழந்தைகளை காண முடியாததால் மருத்துவர் அபிநய வெங்கடேஷ் கார்த்திக் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு பட உலகில் 1960 மற்றும் 70களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வாணிஸ்ரீ. சில கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ஊருக்கு உழைப்பவன், சிவகாமியின் செல்வன், வாணி ராணி, வெள்ளி விழா, புண்ணிய பூமி, நிறை குடம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியுடன் வாணிஸ்ரீ நடித்த வசந்த மாளிகை திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கே எடுத்துச் சென்றது. பாலாஜி, சி.ஐ.டி. சகுந்தலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் அப்போது வெள்ளிவிழா கொண்டாடியது.
வாணிஸ்ரீ, கருணாகரன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.
வாணிஸ்ரீ - கருணாகரன் தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் அபிநய வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூரு அரசு மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்ததாக தெரிகிறது. கொரோனா பிரச்சனை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தை காண முடியாமல் தவித்த கார்த்திக், தந்தை கருணாகரனுடன் திருக்கழுகுன்றத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண முடியாததால் மருத்துவர் அபிநய வெங்கடேஷ் கார்த்திக் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தற்போது போலீஸ் விசாரணையில்... வெளியாகியுள்ள தகவலின் படி அபிநய வெங்கடேஷ், தன்னுடைய தாயுடன் சொத்து பிரச்சனை காரணமாகவும் கடந்த சில மாதங்களாக கடுமையான பிரச்சனை இருந்து வந்ததாகவும், அதே நேரத்தில் பெங்களூரில் இருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல், மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க முடியவில்லை என்கிற பரிதவிப்பு போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், இவருடைய தற்கொலைக்கான எந்த கடிதமும் கிடைக்காததால்... இவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணையை நகர்த்தியுள்ளனர்.
மேலும் கடைசியாக அவருக்கு போன் செய்த நபர்கள் யார் யார்? அதிகமாக யாருடைய எண்ணுக்கு அவர் போன் செய்துள்ளார் என்பது குறித்த தகவல்களை சேகரித்து விசாரணை செய்து வருகிறார்கள்.