தமிழ் சினிமாவின் இளம் வெற்றி தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.கே.சுரேஷ். பழம்பெரும் நடிகர் சங்கிலி முருகனின் தம்பி மகனான இவர் நடிகராக வேண்டும் என்கிற ஆசையில் சினிமாவிற்குள் வந்து... விநியோகிஸ்தர் , மற்றும் தயாரிப்பாளராக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தார்.
பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'தாரைதப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகம் கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து , மருது போன்ற படங்களில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்த இவர் தற்போது 'வேட்டை நாய்', 'பில்லா பாண்டி' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமண தகவலை கூறுவதற்காக அண்மையில் சுரேஷ் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சுமங்கலி சீரியலில், கதாநாயகியாக நடித்து வரும் திவ்யா என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
மேலும் இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் , அதோடு அவர் என்னுடைய சொந்த ஊரான ராமநாதபுரம் பெண் என்றும் கூறினார்.