
தமிழ் சினிமாவின் சகாப்தம் மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். மகேந்திரனின் உடலுக்கு மலர் வளையம் வைத்தபோது ராஜாவின் கரங்கள் நடுங்கின. பாரதிராஜா கதறி அழுதார். ரஜினி கண் கலங்கி மகேந்திரன் உடல் அருகே நீண்ட நேரம் நின்றபடியே இருந்தார்.
பல நூற்றுக்கணக்கான இயக்குநர்களுக்கு இசையமைத்திருந்தாலும் இளையராஜாவின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இயக்குநர் என்றால் அது எப்போதும் இயக்குநர் மகேந்திரன் தான். இவரது ‘முள்ளும் மலரும்’ படத்தைப் பின்னணி இசையில்லாமல் பார்த்த தயாரிப்பாளர் ‘என்னை இப்படி நடுத்தெருவுல கொண்டு வந்து நிறுத்திட்டேயே’என்று மகேந்திரனிடம் புலம்பியதும் படம் பின்னணி இசையுடன் தயாராகி சூப்பர் ஹிட் ஆனவுடன் பிளாங்க் செக்கை அவரே கொண்டு வந்துகொடுத்ததும் ஊர் உலகமறிந்த கதை.
இப்படி ’முள்ளும் மலரும்’ படத்தில் ராஜாவுடன் தொடங்கிய நட்பை தனது அத்தனை படங்களிலும் தொடர்ந்தார் மகேந்திரன். “என் படங்களில் அதிக வசனம் இல்லை என்று மக்கள் சொல்வார்கள். அது நான் இளையராஜாவை நம்பி செய்வது. எனது வசனங்களில் உள்ள வெற்றிடத்தை எல்லாம் எப்போதும் ராஜா தன் இசையால் நிரப்புவார். ஒரு கதை என் மனதில் உருவானதும் நான் அதை முதன் முதலில் ராஜாவிடம் தான் சொல்வேன். ராஜாவை விட்டு வேறொரு இசையமைப்பாளரை என் படத்துக்கு போடுவது குறித்து நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை’ என்று எப்போதும் ராஜா குறித்துச் சொல்லிக்கொண்டே இருப்பார் மகேந்திரன்.
அந்த உயர்ந்த நட்பின் நினைவோட்டத்தால்தான் மலர் வளையம் வைக்கும்போது ராஜாவின் கைகள் நடுங்குகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.