Ilayaraja : மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு, இளையராஜா தரப்பில் இருந்து அவருடைய வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள சினிமாவிற்கு இந்த 2024ம் ஆண்டு துவக்கமே ஒரு அதிரடியாக இருந்தது என்றால் அது மிகையல்ல. காரணம் கோலிவுட் உலகில் இந்த வருட துவக்கத்தில் பெரிய அளவில் எந்த திரைப்படமும் ஹிட் ஆகாத நிலையில், மலையாள மொழியில் வெளியான பல திரைப்படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிலும் இந்திய அளவிலும், குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறிய மஞ்சுமெல் பாய்ஸ். அந்த பட குழுவினருக்கு இன்றளவும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது, உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து மலையாள திரையுலகில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த படம்.
இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய குணா திரைப்படத்தில் ஒலிக்கும் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது இந்த திரைப்படத்தின் இதயத்துடிப்பாக இருந்தது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் இசை ஞானி இளையராஜா அவர்கள் மஞ்சுமெல் பாய்ஸ் பட குழுவிற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த படத்தில், அனுமதியின்றி தன்னுடைய குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி, அப்பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் தற்பொழுது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குணா படத்தில் வரும் அந்த பாடலை உருவாக்கியவர் என்ற முறையில், பதிப்புரிமை சட்டப்படி தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜா ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்பட டைட்டில் டீசரில் தனது பட பாடலை பயன்படுத்தியதற்காக படக்குழு மேல் குற்றச்சாட்டை முன் வைத்தது அனைவரும் அறிந்ததே.