உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்த கூழாங்கல் (koozhangal), தமிழ் சினிமாவுக்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கார் விருதையும் (oscar award) வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
சினிமா துறையில் மிகவும் உயரிய விருதாக பார்க்கப்படுவது ஆஸ்கார். ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதுக்கு சிறந்த சர்வதேச திரைப்படம் என்கிற பிரிவில் இந்தியா சார்பில் ஒரு படம் பரிந்துரைக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய தமிழ் படமான கூழாங்கல் (koozhangal) பரிந்துரைக்கப்பட்டது.
சிறந்த சர்வதேச திரைப்படம் என்கிற பிரிவில் போட்டியிட கூழாங்கல் உள்பட உலக அளவில் 93 நாடுகளிலிருந்து படங்கள் கலந்து கொண்டன. அவற்றிலிருந்து 15 படங்கள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்படும். அந்த 15 படங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதில் 'கூழாங்கல்' படம் இடம்பெறாமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கூழாங்கல் திரைப்படம் ஆஸ்கார் போட்டியிலிருந்து வெளியேறியதால் மிகுந்த வருத்தம் அடைந்த அப்படத்தின் தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் (Vignesh shivan), இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இந்தப் பட்டியலில் கூழாங்கல் இருந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு தரமான சினிமாவைத் தந்ததற்காக இயக்குனர் வினோத்ராஜுக்கு பாராட்டுக்கள். ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் எங்களது படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவுக்கு எனது நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். உலகளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்த கூழாங்கல், தமிழ் சினிமாவுக்கு எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கார் விருதையும் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இம்முறையும் அது கைநழுவிப் போய் உள்ளது.
கூழாங்கல் படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் (Nayanthara) இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.