கடந்த ஓரிரு தினத்திற்கு முன்பு மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் இறங்கிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானை போலீசார் கைது செய்தனர். இவருடைய கைதை கண்டித்து நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்களுடன் இவர்களை கைது செய்து அடைத்து வைத்திருந்த திருமண மண்டபத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தன்னையும் கைது செய்யுமாறு கூறி போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் இவரையும் கைது செய்தனர்.
ஆனால் இதுநாள் வரை போலீசார் இவரை வெளியிடவில்லை. இந்நிலையில் இன்று நடிகர் சிம்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசினார்.
அப்போது "நானும் மன்சூர் அண்ணனும் மணிரத்னம் இயக்கத்தில் செக்க செவந்த வானம் படத்தில் நடித்து வந்தோம், அப்போது அடிக்கடி அவர் வயிற்றில் கைவைத்திருந்தார் அப்போது என்ன ஆச்சு என்று கேட்டபோது, கிட்னியில் கல் இருக்கு, அதுக்காக அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன் என கூறினார்" இதற்காக தினமும் மருந்துகளும் உட்கொண்டு வந்தார்.
அதன் பிறகு அவர் போராட்டத்தில் கைதாகி வெளியில் வந்திருப்பார் என நினைத்திருந்தேன், ஆனால் அவரது மகனிடம் நேற்று பேசும் போது, அப்பா இன்னும் வரவில்லை, அவர் உடம்பு வேறு சரியில்லை, அவர் உயிரோடு இருக்கிறாரா கூட தெரியவில்லை என அழுவது போல் பேசினார்.
அதனால் என்ன நடக்கிறது என கேட்க தான் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்திருக்கிறேன் என கூறியுள்ளார்.