மறைந்த நடிகர் விவேக்கை கௌரப்படுத்த போகும் மத்திய அரசு..! வெளியான தகவல்..!

By manimegalai aFirst Published Apr 28, 2021, 4:53 PM IST
Highlights

பல மரங்களை நட்டு, மக்கள் உயிர் வாழ ஆதாரமான ஆக்சியன் பெருகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அரும் பணியை மேற்கொண்ட விவேக்கிற்கு மத்திய அரசு,  உரிய மரியாதை செய்ய  ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் விவேக் கடந்த 16ம் தேதி மாராடைப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொண்ட போதும், 17ம் தேதி காலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம், ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சமூக சிந்தனையாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் என பன்முக தன்மைகளுடன் வலம் வந்த விவேக்கின் திடீர் மரணத்திற்கு திரையுலகினர் பலரும் நேரிலும்,சோசியல் மீடியா மூலமாகவும் தங்களுடைய இரங்கலை பதிவு செய்தனர். குறிப்பாக நடிகர் விஜய், விவேக் மரணத்தின் போது ஜார்ஜியாவில் இருந்ததால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியவில்லை. எனவே சென்னை வந்த மறு தினமே, விவேக் வீட்டிற்கு சென்று தன்னுடைய அஞ்சலியை செலுத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் கொள்கையை பின்பற்றி வந்த விவேக், அவருடைய கோரிக்கையின்படி ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் இறங்கினார். இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு உள்ள நிலையில் திடீரென மரணம் அடைந்து விட்டார்.

பல மரங்களை நட்டு, மக்கள் உயிர் வாழ ஆதாரமான ஆக்சியன் பெருகவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், அரும் பணியை மேற்கொண்ட விவேக்கிற்கு மத்திய அரசு,  உரிய மரியாதை செய்ய  ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் மோடி ஆகியோர், நடிகர் விவேக் படம் போட்ட தபால்தலையை வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விவேக்கிற்கு மரியாதை கொடுக்கும் விதமாக தமிழக அரசு, அவரது உடலுக்கு, காவல் துறை மரியாதை செலுத்த ஏற்பாடு செய்த நிலையில், விவேக்கின் தபால் தலை வெளியிட்டால் அது அவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய கௌரவமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!