நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நேற்று உத்தரவிட்டது. கடந்த ஜூலை 22-ந் தேதி தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் நீதித்துறை ஊழல் நிறைந்து உள்ளதாக பேசி இருந்தார் சவுக்கு சங்கர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தது. இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் சவுக்கு சங்கருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. கடந்த வாரம் நேரில் ஆஜரான அவர், தனக்கு வீடியோ ஆதாரங்களை தருமாறு கேட்டிருந்தார். இதற்கு அனுமதி அளித்த நீதிமன்றம் வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து இருந்தது.
இதையும் படியுங்கள்... கிடுக்கிப்பிடி போட்ட நீதிமன்றம்...! எதிர்த்து நின்ற சவுக்கு சங்கர்... ஒரு வாரத்திற்கு வழக்கு ஒத்திவைப்பு
பின்னர் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜராக வந்த சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து போலீசார் உடனடியாக அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். சவுக்கு சங்கரின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், சவுக்கு சங்கருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சிங்கம் மாதிரி வாழ்பவர் என்றும், எதையும் ஆராய்ந்து பேசுபவர், உண்மையின் பக்கம் நிற்பவர் என்று புகழ்ந்து பேசியுள்ள மாறன், அவர் மீதான கைது நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். தான் சவுக்கு சங்கரின் பக்கம் நிற்பதாகவும், அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த வீடியோவில் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கைதானார் சவுக்கு சங்கர்... 6 மாதம் சிறை... நீதிமன்ற அவதூறு வழக்கில் கோர்ட் அதிரடி!!