தன்னுடைய அண்ணன் ராம் குமார் பலரிடம் கடன் வாங்கி உள்ளதால்... அவருக்கு தன்னால் உதவ முடியாது என பிரபு கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவாஜி கணேசனுக்கு ராம் குமார் மற்றும் பிரபு என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.. இதில், ராம் குமாரின் மகன் துஷ்யந்த், தனது மனைவியுடன் சேர்ந்து, நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஜகஜால கிலாடி படத்தை தயாரிக்க தனபாக்யம் என்ற நிறுவனத்திடம் கடன் வாங்கினார். பணம் திருப்பித் தரப்படாததால், நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
மேலும், துஷ்யந்தின் தாத்தா சிவாஜி கணேசனுக்குச் சொந்தமான தி நகரில் உள்ள வீட்டை பறிமுதல் செய்து ஏலம் விட வேண்டும் என்று தனபாக்யம் நிறுவனம் தனது மனுவில் கூறி இருந்த நிலையில், போதுமான அவகாசம் வழங்கப்பட்ட போதிலும் சிவாஜி கணேசன் பேரன் பதிலளிக்கத் தவறியதால், வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது வீட்டை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது. இந்த பறிமுதல் உத்தரவை எதிர்த்து நடிகர் பிரபு தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், என் தந்தை சிவாஜி கணேசன் உயிருடன் இருந்தபோதே தனது விருப்பப்படி வீட்டை என் பெயரில் எழுதிவைத்து விட்டார். அந்த வீடு எனக்குச் சொந்தமானது. என் சகோதரர் ராம் குமார் சம்பந்தப்பட்ட நிதிப் பிரச்சினை காரணமாக என் வீட்டைக் கைப்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். வீட்டுப் பத்திரம் என் பெயரில் உள்ளது. என் சகோதரர் ராம் குமாருக்கு இந்த வீட்டில் எந்த உரிமையும் இல்லை என கூறி இருந்தார்.
எனவே, வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை நீக்க வேண்டும் என்று ,மனுவில் பிரபு குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று வாரம் நீதிபதி அப்துல் குத்தாஸ் முன் விசாரணைக்கு வரும் என்றும், அப்போது தீர்ப்பு நடிகர் பிரபுவுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நடிகர் பிரபுவிடம் நீதிபதி "உங்கள் அண்ணன் கடன்களை நீங்க அடைத்துவிட்டு பின்னர் அந்த தொகையை அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என கேட்டிருக்கிறார். அதற்கு பிரபு "அவர் நிறைய பேரிடம் இது போல் கடன் வாங்கியுள்ளார். என்னால் அவருக்கு உதவ முடியாது" என திட்டவட்டமாக கூறி விட்டாராம்.